மும்பை : ஐபிஎல் தொடரில் மிக வெற்றிகரமான அணி என்றால் அது மும்பை இந்தியன்ஸ் அணிதான். இதுவரை ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று உள்ள மும்பை இந்தியன்ஸ் அணி முதல் முறையாக ஐபிஎல் தொடரில் 250 போட்டியில் விளையாடிய அணி என்ற பெருமையும் பெற்று இருக்கிறது.
இப்படி பல பாரம்பரியத்தைக் கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணியில் தற்போது எதுவுமே சரியில்லை. இதற்குக் காரணம் கேப்டன் பொறுப்பில் இருந்த ரோகித் சர்மா நீக்கப்பட்டு குஜராத் அணியிலிருந்து வாங்கப்பட்ட ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டது தான்.

இதனால் அணியில் ஒற்றுமை இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்த நிலையில் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவால் ஏன் வெற்றியை பெற வைக்க முடியவில்லை என்பது குறித்து தற்போது பார்க்கலாம். மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணம் அணியில் ஒற்றுமை இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.
ரோகித் சர்மா போன்ற ஒரு கேப்டனை மாற்றப் போகிறோம் என மும்பை இந்தியன்ஸ் அணி முறையான அறிவிப்பை கொடுக்காமல் வீரர்களிடையே கொடுக்காததும், ரோகித் சர்மா இடம் இது குறித்து ஆலோசிக்காததும் தான் காரணம். ரோகித் தலைமையில் மும்பை அணி ஏற்கனவே நன்றாக செட்டாகிவிட்டது. இந்த நிலையில் திடீரென்று தலைமை பொறுப்பை மாற்றினால் நிச்சயம் அந்த அணி தடுமாறும்.
அதனால்தான் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது. எப்போதுமே மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு ஃபயர் இருக்கும். அதாவது பேட்ஸ்மேன்கள் பயமின்றி அதிரடியாக விளையாடுவார்கள். பவுலர்கள் விக்கெட்டுகளை வேட்டையாட கடும் நெருக்கடி கொடுப்பார்கள்.
ஆனால் இது இரண்டுமே தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் மிஸ் ஆகிறது. கேப்டன் பொறுப்பில் ரோகித் சர்மா இருக்கும்போது அவருடைய யுக்தி தான் மும்பை அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. வீரர்களை மாற்றுவது பில்டர்களை மாற்றுவது என ரோகித் சர்மா சாணக்கியராக திகழ்ந்தார். ஆனால் ஹர்திக் பாண்டியா அப்படி எந்த ஒரு மாற்றத்தையும் களத்தில் செய்வது போல் தெரியவில்லை.
முதலில் அணி வெற்றி பெற வேண்டும் என்றால் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்குள்ளயே ரோகித் சர்மா அணி, ஹர்திக் பாண்டியா அணி என இரண்டு அணி இருக்கிறதோ என்று சந்தேகம் வருகிறது. இதே போல் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள மார்க் பவுச்சர் அணியில் இருக்கும் குறை என்ன ,வீரர்களை எப்படி ஒருங்கிணைப்பது என்பது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இன்னும் சொல்லப்போனால் அணியில் இருக்கும் பிளவை அவரே ஊக்குவிக்கிறாரோ என்று தோன்றுகிறது. புஷ்பா என்றால் Fire என்று சொல்வது போல் மும்பை இந்தியன்ஸ் அணி என்றால் பயர் என்று அந்த அணி ரசிகர்கள் கூறுவார்கள். ஆனால் அந்த பயர் தற்போது மிஸ் ஆவது தோல்விக்கு காரணம். இது ஹர்திக் பாண்டியாவின் மைனஸா, இல்லை அணி நிர்வாகத்தின் மைனஸ் என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்.