மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மூலம் பல திறமை வாய்ந்த இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டு நட்சத்திர அந்தஸ்தை பெறுகிறார்கள். கடந்த ஆண்டு எப்படி ரிங்கு சிங், ரசிகர்களின் கவனத்தைப் பெற்று இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடினார்.
அதேபோல் இந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த 22 வயது வீரர் ஒருவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். இளம் வயதிலேயே அதிரடியாக ஆடி நெருக்கடியான சூழலில் அணிக்கு வெற்றியை பெற்று தருகிறார்.

தற்போது டி20 கிரிக்கெட்டில் நம்பர் ஒன் வீரர் என்றால் அது சூரிய குமார் யாதவ் தான். பல திறமைகள் உடைய சூரியகுமார் யாதவுக்கே 30 வயதுக்கு மேல் தான் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ரியான் பராக், சிறுவயதிலேயே தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவருக்கு இந்திய அணியில் விரைவில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரும் நியூஸிலாந்து கிரிக்கெட் வீரருமான ஷேன் பாண்ட் ரியான் பராக்கை வெகுவாக பாராட்டியிருக்கிறார். மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 39 பந்துகளில் ரியான் பராக் 54 ரன்கள் எடுத்தார். இதில் 5 பவுண்டரிகளும், மூன்று சிக்சர்களும் அடங்கும். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரியான் பராக், இளம் வயதிலேயே மிகப்பெரிய திறமைசாலியாக இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் தற்போது ஒரு கிரிக்கெட் வீரராக முதிர்ச்சி அடைந்திருக்கிறார். ரியான் பராக்கை பார்க்கும்போது, எனக்கு சூரியகுமார் யாதவ் தான் நினைவுக்கு வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். கிட்டத்தட்ட ரியான் பராக்கும் அவரைப் போலவே இருக்கிறார். சூரியகுமார் போலவே திறமைசாலியாக இருக்கிறார்.
இத்தனைக்கும் இவருடைய வயது வெறும் 22 தான் ஆகிறது. எங்கள் அணியின் வெற்றிக்கு காரணம் நாங்கள் சரியான வீரர்களை தேர்வு செய்து விளையாடுகிறோம். அதற்கு கிடைத்த பரிசு தான் இந்த வெற்றி என்று நான் நினைக்கிறேன். வெளியில் இருந்து வரும் சத்தங்களை நாங்கள் கேட்பது கிடையாது. எங்களுடைய குறிக்கோள் எல்லாம் அணிக்குள் மடும் தான் இருக்கும். நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கடுமையாக உழைத்து வருகிறோம் என்று ஷேன் பாண்ட் கூறியுள்ளார்.