மொகாலி: பஞ்சாப் கிங்ஸ் அணியின் கிரிக்கெட் வளர்ச்சி குழு தலைவராக இந்திய அணியின் முன்னாள் வீரரும், பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கர் பொறுப்பேற்றுள்ளார்.
ஒவ்வொரு ஐபிஎல் சீசனுக்கும் ஒரு கேப்டன், ஒவ்வொரு சீசனுக்கும் ஒரு பயிற்சியாளர் என்பது தான் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வழக்கம். இதுவரை பஞ்சாப் அணியின் கேப்டன்கள் எண்ணிக்கையும், ஐபிஎல் சீசனின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட ஒன்று தான். அதேபோல் ஒவ்வொரு ஐபிஎல் ஏலத்தின் போதும் குறைந்தபட்சம் 15 வீரர்களையாவது விடுவிக்கும் வழக்கம் கொண்ட அணி பஞ்சாப்.

ஆனால் அடுத்த சீசனுக்கு தயாராகும் வகையில் பஞ்சாப் அணி 5 வீரர்களை மட்டுமே விடுவித்துள்ளது. அதில் எந்த இந்திய வீரர்களையும் விடுவிக்காமல் சரியான வீரர்களை மட்டுமே விடுவித்துள்ளது. பஞ்சாப் அணி தரப்பில் மோகித் ராதே, ராஜ் பவா, ஷாரூக் கான், பனுகா ராஜபக்சே, பல்தேஜ் சிங் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பாக பஞ்சாப் முக்கிய நகர்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பங்கரை மீண்டும் பஞ்சாப் அணி நிர்வாகத்திற்குள் கொண்டு வந்துள்ளது. அவருக்கு பஞ்சாப் அணியின் கிரிக்கெட் வளர்ச்சி குழு தலைவர் குழு தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சஞ்சய் பங்கர் ஏற்கனவே 2014ஆம் ஆண்டு பஞ்சாப் அணி துணை பயிற்சியாளராக இருந்தவர். அதன்பின் 3 ஆண்டுகளாக தலைமை பயிற்சியாளராக பொறுப்பு வகித்த அவர், இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட வாய்ப்பு கிடைத்ததால், பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகினார். தற்போது பஞ்சாப் அணியுடன் மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சஞ்சய் பங்கர் பேசுகையில், பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மீண்டும் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது. எங்களிடம் பிளேயிங் லெவனுக்கான வீரர்கள் இருக்கிறார்கள். அதேபோல் குறைந்த அளவிலான வீரர்களை மட்டுமே விடுவித்துள்ளோம். தற்போது இந்த அணிக்கு கூடுதல் ஆதரவு வழங்கும் வகையில் நாங்கள் செயல்பட வேண்டியுள்ளது. அதேபோல் சீசனுக்கு பின்னரும் வீரர்களை திறன்மிக்கவர்களாக மாற்ற வேண்டிய தேவையும் உள்ளது என்று தெரிவித்தார்.