கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் அடுத்த வாரத்தில் நடக்கவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வரும் நிலையில், சில வாரங்களுக்கு முன் கேகேஆர் அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டார். கேகேஆர் அணிக்காக இருமுறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ள கம்பீர், மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளதால் ரசிகர்களிடையே அந்த அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதனிடையே வரும் ஐபிஎல் சீசனில் ஸ்ரேயாஸ் ஐயர் கேகேஆர் அணிக்கு கம்பேக் கொடுக்கவுள்ளார். இதனால் கேகேஆர் அணி நிதீஷ் ராணாவையே கேப்டனாக தொடருமா அல்லது ஸ்ரேயாஸ் ஐயரை நியமிக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஏனென்றால் கேகேஆர் அணியின் ஆலோசகரான கவுதம் கம்பீர், அந்த அணியின் நிதீஷ் ராணாவுக்கு முழு ஆதரவாக இருந்து வந்துள்ளார். டெல்லி அணியின் கேப்டனாக ராணா இருந்ததற்கு கவுதம் கம்பீர் தான் காரணம்.
இவர்கள் இருவருமே பயிற்சியாளர் சஞ்சய் பரத்வாஜிடம் பயிற்சி பெற்றவர்கள். அதேபோல் எல்பி சாஸ்திரி கிரிக்கெட் மைதானத்தில் ஒன்றாக விளையாடியவர்கள். இதனால் கேகேஆர் அணியில் ராணாவை வாங்க வேண்டும் என்று விடாபிடியாக இருந்ததே கம்பீர் தான். அதுமட்டுமல்லாமல் கேகேஆர் அணியின் கேப்டனாக நிதீஷ் ராணா செயல்பட வேண்டும் என்று கவுதம் கம்பீர் கூறியதாகவும் தகவல் வெளியாகியது. இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.
இந்த நிலையில் கேகேஆர் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், நிதீஷ் ராணா துணை கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கவுதம் கம்பீர் ஆலோசனையை கேகேஆர் அணி நிர்வாகம் ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அதேபோல் இந்திய அணிக்காக 3 வடிவ கிரிக்கெட்டிலும் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடி வருவதால், அவரை முன்னிலைப்படுத்துவதன் மூலமாக அந்த அணியின் பிராண்ட் வேல்யூ அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.