அகமதாபாத் : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் குஜராத் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் செயல்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது . குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா கடைசி நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கை மாறிவிட்டார்.
இதன் காரணமாக குஜராத் அணிக்கு 15 கோடி ரூபாய்க்கு மேல் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் புதிய கேப்டனாக கில் நியமிக்கப்பட்டிருக்கிறார். அண்டர் 19 கிரிக்கெட்டில் ஸ்டார் வீரராக விளங்கி வந்த கில் தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் பட்டையை கிளப்பி ரன்களை சேர்த்து வருகிறார்.

இதன் மூலம் ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள கில், நடப்பாண்டில் மட்டும் ஏழு சதம் அடித்திருக்கிறார். இந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் கேப்டனாக அறிவிக்கப்பட்டதை அடுத்து மகிழ்ச்சியை தெரிவித்து இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் குஜராத் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சியும் எல்லையற்ற பெருமையும் எனக்கு தருகிறது.
என் மீது நம்பிக்கை வைத்து இது போன்ற சிறந்த அணியை வழிநடத்த எனக்கு வாய்ப்பு கொடுத்த குஜராத் அணி நிர்வாகத்திற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஐபிஎல் தொடரில் கடந்த இரண்டு சீசன்களில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். வரும் சீசனையும் நான் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
எப்போதும் போல் ஒரு சிறந்த கிரிக்கெட்டை ஒரு அணியாக நாங்கள் விளையாடுவோம் என்று கில் கூறியுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள குஜராத் அணி இயக்குனர் விக்ரம் சோலங்கி, கடந்த இரண்டு ஆண்டுகளாக கில் சிறப்பாக விளையாடி வருகிறார்.ஒரு வீரராக நன்கு அனுபவம் பெற்று வருகிறார். அவருடைய பங்களிப்பால் குஜராத் அணி தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கி வருகிறது. கில் தலைமையில் ஒரு புதிய சகாப்தத்தை எதிர்நோக்கி ஆர்வத்துடன் காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
பொதுவாக இந்திய அணியின் கேப்டன்கள் ஐபிஎல் போட்டியிலிருந்து தான் வருகிறார்கள். ஐபிஎல் தொடரில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டால் அடுத்த கேப்டன் ஆகும் தகுதி கிடைக்கிறது. இந்த நிலையில் விராட் கோலி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் வரிசையில் சுப்மன் கில்லும் இந்திய அணியின் கேப்டனாக வர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.