டெல்லி: ஐபிஎல் தொடரின் டிரேடிங் முறையில் ஒப்பந்தம் செய்ய இன்று கடைசி நாளாக அமைந்துள்ள நிலையில், மும்பை அணி தரப்பில் டெல்லி அணியிடம் இருந்து குல்தீப் யாதவ் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரையும் வாங்க முயற்சிகள் நடந்ததாக தெரிய வந்துள்ளது.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிச.19ஆம் தேதி துபாயில் நடக்கவுள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்க 333 வீரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். அதில் மொத்தமாக 214 இந்திய வீரர்கள், 119 வெளிநாட்டு வீரர்கள் இருக்கின்றனர். ஆனால் சில அணிகள் தரப்பில் ஏலத்தில் வீரர்களை வாங்குவதை விடவும் டிரேடிங் முறையில் வீரர்களை வாங்கவே அதிக ஆர்வம் கொண்டுள்ளனர்.

குறிப்பாக மும்பை அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட் உள்ளிட்ட வீரர்கள் டிரேடிங் முறையில் வாங்கப்பட்டுள்ளனர். அதேபோல் ஆர்சிபி மற்றும் ஐதராபாத் அணிகள் தரப்பில் ஷாபாஸ் அஹ்மத் மற்றும் மயங்க் டாகர் டிரேடிங் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் லக்னோ மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையில் ஆவேஷ் கான் மற்றும் தேவ்தத் படிக்கல் டிரேட் செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே சிஎஸ்கே அணி தரப்பில் ராயுடுவுக்கான மாற்று வீரரை டிரேட் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அந்த வீரர் யார் என்ற விவரத்தை சிஎஸ்கே தரப்பில் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் மும்பை அணி தரப்பில் டெல்லி அணியுடன் இரு வீரர்களை டிரேட் முறையில் ஒப்பந்தம் செய்ய கோரப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

மும்பை அணியில் பியூஷ் சாவ்லாவை நம்பியே சுழற்பந்துவீச்சு இருக்கிறது. ஏற்கனவே ஹிருத்திக் ஷோக்கீன் விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால் பியூஷ் சாவ்லாவை விடவும் வேறு இந்திய ஸ்பின்னரை மும்பை அணி நிர்வாகம் தேடி வந்தது. இதன்படி டெல்லி அணியிடம் குல்தீப் யாதவை டிரேட் செய்ய விருப்பம் தெரிவித்து மும்பை அணி அணுகியுள்ளது. அதேபோல் மிட்செல் மார்ஷையும் டிரேட் செய்ய விரும்பியதாக கூறப்படுகிறது.
இந்த விண்ணப்பம் மும்பை அணியிடம் இருந்து ஐபிஎல் நிர்வாக குழு மூலமாக டெல்லி அணி நிர்வாகிகளுடன் முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மும்பை அணியின் உரிமையாளர் மற்றும் நிர்வாகிகள் மொத்தமாக விருப்பமில்லை என்று பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மும்பை அணி தரப்பில் முகமது ஷமியிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.