ஐதராபாத் : மும்பை அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ஐதராபாத் மைதானத்திலும் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா திடீரென நீக்கப்பட்டு, புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டார். குஜராத் அணிக்காக 2 ஆண்டுகள் விளையாடிய ஹர்திக் பாண்டியா, திடீரென மும்பை அணியின் அழைப்பின் பேரில் டிரேட் செய்யப்பட்டார். ஹர்திக் பாண்டியாவை அணியில் கொண்டு வருவதற்காக அதிகளவிலான தொகை செலவிடப்பட்டது.

இதன் மூலம் மும்பை அணி தனது 6வது ஐபிஎல் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேப்டன்சி மாற்றத்தை ரசிகர்கள் ரசிக்கவில்லை என்று தெரிகிறது. ஏற்கனவே அகமதாபாத் மைதானத்தில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் கேப்டனாக காளமிறங்கிய ஹர்திக் பாண்டியாவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஹர்திக் பாண்டியா டாஸ் போடும் போதே ரசிகர்களின் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் ஹர்திக் பாண்டியா கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா பவுலிங் செய்ய போவதாக அறிவித்த போதே, ஐதராபாத் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் ரோகித் சர்மாவின் பெயரால் கோஷம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் மூலமாக ரோகித் சர்மா மும்பை அணிக்காக 200வது ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய பெருமையை பெற்றார். மும்பை அணிக்காக 200 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் ரோகித் சர்மா தான். இதற்கான பிரத்யேக ஜெர்சியை சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மாவுக்கு அளித்தார்.
அப்போதே ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக குரல்கள் எழுந்தன. அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரின் முதல் 3 சீசன்களில் ரோகித் சர்மா ஐதராபாத் அணிக்காக தான் விளையாடி இருக்கிறார். இதனால் ஐதராபாத் மண்ணில் ரோகித் சர்மாவுக்கு அதிகளவிலான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிரான கோஷங்கள் ஐதராபாத் மைதானத்தில் தொடர்வது மும்பை அணி நிர்வாகிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.