ஐதராபாத் : மும்பை அணியின் ஓய்வறையில் சக வீரர்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசியுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 277 ரன்களை குவித்து புதிய வரலாறு படைத்தது. 17 ஆண்டு கால ஐபிஎல் தொடர் வரலாற்றிலேயே ஒரு அணியால் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

மும்பை அணியின் அத்தனை பவுலர்களையும் ஐதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் சிதறடித்தனர். டெத் ஓவர் கிங் என்று கொண்டாடப்படும் பும்ராவையும் கிளாசன் பொளந்து கட்டினார். இருப்பினும் மனம் தளராத மும்பை அணி, 246 ரன்களை குவித்து போராடி தோல்வியை சந்தித்தது. ஏற்கனவே குஜராத் அணியுடன் தோல்வியடைந்த சூழலில், தற்போது ஐதராபாத் அணியுடனும் மும்பை அணி தோல்வியடைந்துள்ளது.
இதனால் புள்ளிப்பட்டியலில் 2 தோல்விகளுடன் மும்பை அணி 9வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் போட்டி முடிவடைந்த பின் ஓய்வறையில் மும்பை வீரர்கள் முன்னிலையில் ஹர்திக் பாண்டியா பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. அதில், கடினமான வீரர்களுக்கு தான் கடினமான சோதனைகள் வைக்கப்படும். இந்த ஐபிஎல் தொடரிலேயே கடினமான அணி என்றால் அது மும்பை அணி தான்.
இவ்வளவு பெரிய இலக்கிற்கு அருகில் நம்மை போல் வேறு எந்த அணியாலும் வந்திருக்க முடியாது. ஒரு பேட்டிங் குழுவாக நான் பெருமையாக உணர்கிறேன். இறுதியாக நாம் அனைவரும் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் தான். எனக்கு கூடுதல் பெருமையளிப்பது நம் அணியின் பவுலர்கள் தான். இன்றைய நாள் கடினமாக இருந்த போதும், எந்த பவுலரும் ஓடிவிடவில்லை.
ஒவ்வொரு பவுலரும் பந்தை என்னிடம் கொடுங்கள் என்று ஆர்வமாக இருந்தனர். இனி வரும் போட்டிகளிலும் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருந்து, எந்த நல்லது, கெட்டது வந்தாலும் ஒன்றாக எதிர்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார். கடந்த 2 போட்டிகளிலும் மும்பை அணி வெளி மைதானங்களில் விளையாடவுள்ள நிலையில், அடுத்தடுத்து சொந்த மைதானத்தில் மும்பை அணி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.