ஐதராபாத் : ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங் தான் தோல்விக்கு காரணம் என்று முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் விமர்சித்துள்ளார்.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய கிளாசன் 34 பந்துகளில் 80 ரன்களும், அபிஷேக் சர்மா 23 பந்துகளில் 63 ரன்களும், டிராவிஸ் ஹெட் 24 பந்துகளில் 62 ரன்களும் விளாசினர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 246 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. சிறப்பாக ஆடிய இளம் வீரர் திலக் வர்மா 34 பந்துகளில் 6 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 64 ரன்களியும், டிம் டேவிட் 22 பந்துகளில் 3 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 42 ரன்களையும் சேர்த்தனர்.
இந்த போட்டியில் மும்பை அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் இலக்கை எட்டி வெற்றிபெற வேண்டும் என்று தொடக்கம் முதலே தீவிரமாக இருந்தனர். 19வது ஓவரில் களமிறங்கிய ரொமாரியோ ஷெப்பர்ட் கூட 6 பந்துகளில் 15 ரன்களை விளாசினார். கிட்டத்தட்ட மும்பை அணிக்காக பேட்டிங் செய்த பேட்ஸ்மேன்களில் ஒருவரை தவித்து அனைவரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 180க்கும் அதிகமாக இருந்தது.
ஆனால் கடைசி நேரத்தில் ஃபினிஷர் ரோலில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, டான்ஸ் ஆடிக் கொண்டே மைதானத்திற்கு வந்து 20 பந்துகளில் 24 ரன்களை மட்டுமே சேர்த்தார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 120ஆக மட்டுமே உள்ளது. பவுண்டரிகள் விளாச முடியாமல் அதிக டாட் பால்கள் மற்றும் ஒரு ரன்னை எடுத்ததே மும்பை அணி மீதான அழுத்தம் அதிகமானதற்கு காரணமாக உள்ளது/
இதனால் மும்பை அணியின் தோல்விக்கு ஹர்திக் பாண்டியாவின் புரிதலற்ற பேட்டிங்கே காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில், மொத்த மும்பை அணியின் வீரர்களும் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் உயிரைக் கொடுத்து விளையாடி கொண்டிருக்கிறார்கள்.. ஆனால் கேப்டனால் மட்டும் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட முடியாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். பதானின் ட்வீட் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.