மும்பை : குஜராத் அணிக்கு ஹர்திக் பாண்டியா இல்லையென்றாலும் தமிழக வீரர் விஜய் சங்கர் சிறியளவில் பவுலிங்கில் பங்களித்தாலே போதும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் அறிமுகமான முதல் சீசனிலேயே சாம்பியன் பட்டத்தை வென்று பலரையும் வியக்க வைத்தது ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி. அதேபோல் 2வது சீசனில் குஜராத் அணி இறுதிப்போட்டி வரை சென்று கடைசி 2 பந்துகளில் தோல்வியடைந்தது. இந்த நிலையில் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா திடீரென மும்பை அணிக்கு தாவினார்.

இதற்காக மும்பை அணி தரப்பில் ரூ.100 கோடி அளவிற்கு குஜராத் அணிக்கு வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. தொடர்ந்து மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டார். பின்னர் குஜராத் அணியின் புதிய கேப்டனாக இந்திய இளம் வீரர் சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டார். அதேபோல் ஹர்திக் பாண்டியாவின் இடத்தை நிரப்பும் வகையில் குஜராத் அணி ஏலத்தில் சிறப்பாக செயல்பட்டது.
2015 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக ஆடிய உமேஷ் யாதவ், மோகித் சர்மா, முகமது ஷமி ஆகியோர் உள்ளனர். இந்த நிலையில் குஜராத் அணி பற்றி சுனில் கவாஸ்கர் பேசுகையில், ஹர்திக் பாண்டியாவிற்கு கீழ் விளையாடிய தமிழ்நாடு வீரர் விஜய் சங்கர் அவரிடம் நிறைய கற்று கொண்டுள்ளார். கடினமான சூழலில் எப்படி பவுலிங் செய்ய வேண்டும், ஹர்திக் பாண்டியா எவ்வாறு செயல்பட்டார் என்று அறிந்திருப்பார். குஜராத் அணிக்காக 2 சீசன்களில் ஹர்திக் பாண்டியா செய்ததை விஜய் சங்கரால் செய்ய முடியும்.
ஹர்திக் பாண்டியா அளவிற்கு விஜய் சங்கரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. ஆனால் 80 சதவித தாக்கத்தை கொடுத்தாலே போதுமானதாக நினைக்கிறேன். கடந்த சீசனில் மட்டும் 10 இன்னிங்ஸில் 301 ரன்களை விளாசியுள்ளார். இம்பேக்ட் பிளேயர் விதிமுறை காரணமாக பவுலிங் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் விஜய் சங்கரால் நிச்சயம் சிறப்பாக செயல்பட முடியும்.
அதேபோல் இந்திய அணிக்காக ஆடிய அனுபவத்தை கொண்ட பவுலர்களை குஜராத் அணி கொண்டுள்ளது. மோதித் சர்மா, உமேஷ் யாதவ் இருவரும் அட்டாக்கில் வித்தியாசத்தை கொண்டு வர முடியும். அதேபோல் ஸ்பென்சர் ஜான்சன் இடதுகை பவுலராக இருக்கிறார். என்னை பொறுத்தவரை குஜராத் அணி மிகச்சிறந்த வீரர்களை கொண்டு சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.