மும்பை: ஐபிஎல் மினி ஏலத்தில் மும்பை அணியின் திட்டம் மற்றும் எந்த வீரருக்கு குறி வைக்க வாய்ப்புகள் இருக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.
அண்மையில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் விமர்சிக்கப்பட்டு வருவது மும்பை அணி என்றே சொல்ல முடியும். திடீரென குஜராத் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவை கொண்டு வந்ததோடு, அவருக்கு கேப்டன் பதவியை கொடுத்துள்ளது. இதனால் 10 ஆண்டுகளில் 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவுக்கு மும்பை அணி நிர்வாகம் அவமரியாதை செய்ததாக ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

அதேபோல் மும்பை அணியை பொறுத்தவரை ஏலத்திற்கு முன்பாக கிட்டத்தட்ட பிளேயிங் லெவன் மற்றும் இம்பேக்ட் பிளேயர் யார் என்பதை முடிவு செய்துவிட்டது என்றே பார்க்கலாம். ஏனென்றால் ஹர்திக் பாண்டியாவை கொண்டு வந்ததன் மூலமாக பொல்லார்ட் இடம் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளது. அதேபோல் ரொமாரியோ ஷெப்பர்டை டிரேடிங் மூலம் கொண்டு வந்து ஃபினிஷிங்கிலும் பலத்தை அதிகரித்துள்ளது.
இதனால் மும்பை அணியின் பிளேயிங் லெவனை ரோகித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, டிம் டேவிட், நேஹல் வதேரா, பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மெத்வால், பும்ரா, ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோரை கொண்டு விளையாட முடியும். ஆனால் ஸ்பின்னர்களில் பியூஷ் சாவ்லாவை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால் மும்பை அணி மினி ஏலத்தில் தரமான ஸ்பின்னரையும், பேக் அப் வீரர்களையும் மட்டுமே வாங்க முயற்சிக்கும் என்று பார்க்கப்படுகிறது. மும்பை அணியின் கையிருப்பில் ரூ.17.75 கோடி உள்ளது. இந்த தொகை மூலமாக 8 இடங்களை மும்பை அணி நிரப்ப வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஒரு வீரருக்காக அதிக தொகை விட்டுக் கொடுத்து வாங்க மும்பை அணி முன்வரும்.
அந்த வகையில் வேகப்பந்துவீச்சாளர் என்பதை விடவும் மும்பை அணிக்கு ஸ்பின்னர்களின் தேவை அதிகமாக உள்ளது. அந்த வகையில் ஹசரங்கா, அகில் ஹொசைன், வெல்லாலகே ஆகியோரில் ஒருவரை வாங்க வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் இந்திய உள்ளூர் வேகப்பந்துவீச்சாளர்களை வாங்கவும் அதிக ஆர்வம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.