சென்னை: பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஷாரூக் கான் மற்றும் மணீஷ் பாண்டே ஆகிய 4 வீரர்களில் 3 பேரை சிஎஸ்கே அணி வாங்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில், அதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே அனைத்து அணிகளும் தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன. அதில் சென்னை அணி மொத்தமாக 8 வீரர்களை விடுவிப்பதாக அறிவித்துள்ளது.

பென் ஸ்டோக்ஸ், டுவைன் ப்ரிடோரியஸ், மகலா, ராயுடு, ஜேமிசன், சிசண்டா, சேனாபதி, பகவத் வர்மா, ஆகாஷ் சிங் உள்ளிட்டோரை விடுவித்துள்ளது. இருப்பினும் 6 வீரர்களை மட்டுமே சிஎஸ்கே அணி நிரப்ப வேண்டிய நிலை இருக்கிறது. சென்னை அணி தரப்பில் ஜெரால்ட் கோட்சியா, ஷாரூக் கான் உள்ளிட்ட வீரர்களை வாங்க முயற்சிக்கலாம் என்று பார்க்கப்படுகிறது.
இதற்காக சிஎஸ்கே அணியிடம் ரூ.31.4 கோடி கையிருப்பு உள்ளது. இதனால் மினி ஏலத்தின் தொடக்கம் முதலே சிஎஸ்கே அணி சுறுசுறுப்பாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஒரு ஆல்ரவுண்டர், ஒரு வெளிநாட்டு பந்துவீச்சாளர் மற்றும் ராயுடுவுக்கான மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிரப்ப வேண்டும் நிலையில் உள்ளது. இதனால் ஆஸ்திரேலியா அணியின் பேட் கம்மின்ஸை அணிக்குள் கொண்டு வர சிஎஸ்கே அணி முயற்சிக்கலாம்.
சிஎஸ்கே அணியில் 8வது வீரராக தீபக் சஹர் களமிறங்கி வரும் சூழலில், கம்மின்ஸ் சேர்க்கப்பட்டால் 9வது வரிசை வரை பேட்டிங் வரிசை நீளும். அதேபோல் தோனி எப்போதும் ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர்களை விரும்ப கூடிய வீரர். அதனால் சிஎஸ்கே நிர்வாகம் நிச்சயமாக பேட் கம்மின்ஸ் மீது குறி வைத்திருக்கும் என்று பார்க்கப்படுகிறது.
அதேபோல் தோனி இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களை விரும்பக் கூடிய வீரர். அதனால் மிட்செல் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸில் ஒருவரை அணிக்குள் கொண்டு வர வாய்ப்புகள் உள்ளது. இதுமட்டுமல்லாமல், ராயுடுவுக்கு மாற்று வீரராக ஷாரூக் கானை வாங்க சிஎஸ்கே நிர்வாகிகள் ஆர்வமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் மணீஷ் பாண்டேவை எடுத்தாலும் ஆச்சரியமில்லை என்றும் பார்க்கப்படுகிறது.