மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்குகிறது முதல் 17 நாட்களுக்கான அட்டவணை மட்டும் தான் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் அட்டவணை வெளியான பிறகு எஞ்சியுள்ள போட்டிக்கான அட்டவணை அறிவிக்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தேர்தலுக்கான அட்டவணை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தல் நடைபெறும் ஊர்களில் ஐபிஎல் போட்டிகளை வைத்தால் பாதுகாப்பு குறைபாடு ஏற்படும்.

இதற்காக தான் பிசிசிஐ எஞ்சிய ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணையை இன்னும் வெளியிடாமல் இருந்தது. இதனால் பாதி ஐபிஎல் போட்டி துபாயில் நடைபெறுமா என்ற சந்தேகம் வந்தது. ஆனால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றும், கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு இந்தியாவில் போட்டிகள் நடத்தப்பட்டதோ அதேபோல் இம்முறையும் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் சென்னையில் தேர்தல் நடைபெற்றால் அப்போது போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றப்படுமா என்று கேள்விகள் எழுந்துள்ளது. தன்னுடைய கடைசி போட்டியை சென்னையில் விளையாடி ரசிகர்கள் முன் பிரியாவிடை பெற வேண்டும் என்பது தோனியின் ஆசை. இதனால் தேர்தல் தோனியின் ஆசையில் வேட்டு வைத்து விடுமா என்று ரசிகர்கள் கவலைப்பட்டனர்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக நாடாளுமன்றத் தேர்தலில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியே தமிழகத்தில் தேர்தல் முடிந்து விடும். இதன் காரணமாக ஏப்ரல் 19ஆம் தேதிக்கு பிறகு எஞ்சிய போட்டிகளை சென்னையில் நடத்துவதில் எந்த ஒரு சிக்கலும் இருக்காது. இன்னும் சொல்லப்போனால் நான்காவது கட்டம் ஐந்தாவது கட்டம் தேர்தல் எல்லாம் இந்தியாவில் பல முக்கிய நகரங்களில் நடைபெற இருக்கிறது.
அப்போது சென்னையில் தேர்தல் முடிந்திருக்கும் என்பதால் பல முக்கிய போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் தோனியின் கனவில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது. மேலும் இறுதிப்போட்டி கூட சென்னையில் நடக்க வாய்ப்பு இருக்கிறது. இது தமிழக ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக நிச்சயம் இருக்கும்.