மும்பை: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்தாலும், ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடவுள்ளார். கடந்த சீசனில் மும்பை அணி நிர்வாகம் ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதோடு, இம்பேக்ட் பிளேயராக விளையாட வைத்து அவமரியாதை செய்தது.
கேப்டன்சியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்ட போது, அவரின் மனைவி ரித்திகா இன்ஸ்டாகிராமிலேயே நேரடியாக சில குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதுமட்டுமல்லாமல் மெகா ஏலம் நடக்கவுள்ளதால், ஒவ்வொரு அணியும் பிராண்ட் வேல்யூ இருக்கும் வீரரை தேட தொடங்கியுள்ளது. மும்பை அணியால் ரோஹித் சர்மா தக்க வைக்கப்படவும் அதிக வாய்ப்புகள் இல்லை என்று பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், பும்ரா ஆகியோரை தக்க வைக்க மட்டுமே வாய்ப்புள்ளது. ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் இதுவரை 3 இந்திய வீரர்களை மட்டுமே அதிகபட்சமாக ரீடெய்ன் செய்ய அனுமதியளித்து வந்துள்ளது. ஏற்கனவே ரோஹித் சர்மாவின் வயது 37ஐ எட்டியுள்ள நிலையில், இன்னும் அவர் 3 ஆண்டுகள் வரை ஐபிஎல் தொடரில் விளையாட முடியும்.
இதனால் ரோஹித் சர்மாவை மும்பை அணி நிர்வாகம் ஏலத்தில் விட்டால், நிச்சயம் பல்வேறு அணிகளும் அவரை ஒப்பந்தம் செய்ய பெரிய தொகையை கொடுக்க முன் வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏற்கனவே மும்பை அணிக்கு 5 கோப்பையை வென்று கொடுத்திருப்பதால், ரோஹித் சர்மா மூலமாக புதிய அடையாளத்தை பெற பல்வேறு அணிகளும் தீவிரமாக உள்ளன.
அதேபோல் மெகா ஏலம் நடக்கவுள்ள நிலையில் ஆர்சிபி, லக்னோ, குஜராத், பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய 5 அணிகள் புதிய கேப்டனை தேடி வருவதாக தெரிய வந்துள்ளது. இதில் குஜராத் அணியை தவிர்த்து மற்ற 4 அணிகளும் ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. குறிப்பாக பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகள் ரோஹித் சர்மாவை வாங்குவதற்கு தீவிரம் காட்டும்.
இதனால் மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரராக ரோஹித் சர்மா இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் மும்பை அணிக்கும், அம்பானி குடும்பத்திற்கும் பதிலடி கொடுக்கும் வகையில் கோப்பையை வெல்லவும் தீவிரமாக இருப்பார். இதனால் ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.