முல்லான்பூர்: 2025 ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் எலிமினேட்டர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா வீசிய ஒரு ஓவர் தான் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த ஓவருக்குப் பிறகுதான் போட்டி மும்பை இந்தியன்ஸ் பக்கம் சாய்ந்தது. அது குறித்துப் பார்க்கலாம்.
2025 ஐபிஎல் தொடரின் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்த குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் மோதின. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இரண்டாவது தகுதி சுற்று போட்டிக்கு முன்னேறும்; தோல்வியடையும் அணி தொடரிலிருந்து வெளியேறும் என்ற நிலை இருந்தது.

இந்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 228 ரன்கள் குவித்தது. அடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணி சேஸிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் சாய் சுதர்சன் ஒருபுறம் நின்று அதிரடியாக விளையாடி வந்தார். நான்காம் வரிசையில் இறங்கிய வாஷிங்டன் சுந்தர் 200 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்தார். அதிரடியாக ஆடிய அவர் ஐந்து பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களை விளாசி இருந்தார்.
அப்போது குஜராத் டைட்டன்ஸ் அணி 13 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணி அதிரடியாக ரன் குவித்து வந்த நிலையில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் சாய் சுதர்சன் கூட்டணியை முறியடிக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் இருந்தது மும்பை இந்தியன்ஸ். அப்போது 14வது ஓவரை வீச பும்ராவை அழைத்தார் அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா.
அப்போது பும்ராவுக்கு இரண்டு ஓவர்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. எப்போதும் பும்ரா கடைசி 4 ஓவர்கள் இருக்கும்போதுதான் தனது கடைசி இரண்டு ஓவர்களை வீசுவார். ஆனால், இந்த முறை இன்னும் இரண்டு ஓவர்கள் வரை குஜராத் டைட்டன்ஸ் அணி ரன் குவித்தால் மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டு வர முடியாது என்ற நிலையில், பும்ரா பந்து வீச அழைக்கப்பட்டார்.
எதிர்பார்த்தது போலவே, அந்த ஓவரில் பும்ரா வெறும் நான்கு ரன்கள் விட்டுக்கொடுத்ததோடு வாஷிங்டன் சுந்தரின் விக்கெட்டையும் வீழ்த்தினார். அதிலும் அவர் வீசிய யார்க்கர் பந்தை வாஷிங்டன் சுந்தரால் தொடக்கூட முடியவில்லை. அதுவரை ஒரு பந்துக்கு இரண்டு ரன்கள் என ரன் குவித்து வந்த சுந்தர் தனது ஸ்டம்புகளை இழந்தார்.
அப்போது மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த குஜராத் டைட்டன்ஸ் அணி கொஞ்சம், கொஞ்சமாக அழுத்தத்துக்கு ஆளானது. 15வது ஓவரில் அஸ்வினி குமாரும் சிறப்பாக வீசினார். அந்த ஓவரில் ஒன்பது ரன்கள் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. ஓவருக்கு 12 ரன்கள் அதிகமாக எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது.
அப்போது 16வது ஓவரில் சாய் சுதர்சன், ரிச்சர்ட் கிலீசன் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். அத்துடன் குஜராத் டைட்டன்ஸ் அணியின் நம்பிக்கையும் முடிவுக்கு வந்தது. அவர் ஆட்டமிழந்த பிறகு மற்ற பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆட முடியவில்லை; அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை.
கடைசி ஓவரில் 24 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. அப்போது ராகுல் தெவாட்டியா மற்றும் ஷாருக்கான் களத்தில் இருந்தனர். அவர்களால் கடைசி ஓவரில் மூன்று ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.