மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் நீடிப்பாரா? இல்லையா? என்ற மர்மம் இன்னும் விலகவில்லை. இந்த நிலையில், நான்கு ஐபிஎல் அணிகள் அவரை மும்பை அணியில் இருந்து விலக வைக்கும் முயற்சியில் இறங்கி இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய நான்கு அணிகளும் தங்களுக்கு அனுபவம் மிக்க இந்திய கேப்டன் வேண்டும் என்பதால் ரோஹித் சர்மாவை தங்கள் அணிக்கு கொண்டு வர முடியுமா? என திட்டமிட்டு வருகின்றன.
மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பதவியை இழந்த ரோஹித் சர்மாவுக்கு தங்கள் அணியில் கேப்டன் பதவியை அளிக்க தயாராக உள்ளன. ஆனால், ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியால் விடுவிக்கப்பட வேண்டும் அல்லது மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மாவை அணிமாற்றம் செய்ய முன்வர வேண்டும். அதற்கு வாய்ப்பில்லை என்பதால் ரோஹித் சர்மா தாமாகவே அணியை விட்டு விலகுவதாக மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திடம் தெரிவித்தால் அந்த அணி அவரை விடுவித்து விடும்.

அதன் பின் ரோஹித் சர்மா ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க முடியும். அப்படி ரோஹித் சர்மா ஏலத்தில் பங்கேற்றால் இந்த நான்கு அணிகளும் அவருக்காக 50 கோடி வரை ஏலத் தொகை கேட்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 2025 ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் சுமார் 130 முதல் 140 கோடி வரை வீரர்களுக்காக செலவு செய்ய முடியும் என விதியில் மாற்றம் வர உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான புதிய விதியை பிசிசிஐ விரைவில் அறிவிக்க உள்ளது.
அப்படி அதிக தொகையை ஒரு அணி ஏலத்தில் செலவிட முடியும் என்ற நிலை வந்தால் இந்த நான்கு அணிகளும் ரோஹித் சர்மாவுக்காக மட்டுமே 50 கோடியை ஏலத்தில் கேட்க முடிவு செய்துள்ளன. மேலும், இதற்காக முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்பதால் ரோஹித் சர்மா நிச்சயமாக ஏலத்தில் பங்கேற்பாரா? என அவரது வட்டாரத்தில் அந்த அணிகள் விசாரித்து வருகின்றன.
மேலும், அவர் தங்கள் அணிகளுக்கு வந்தால் கேப்டன் பதவி மட்டுமின்றி, வேறு என்னென்ன சலுகைகள், விளம்பர வாய்ப்புகள் அளிக்கப்படும் என்பது குறித்து அவர்கள் தகவலை பரிமாறி வருவதாகவும் கூறப்படுகிறது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா இது குறித்து பேசுகையில், "ரோஹித் சர்மா ஏலத்தில் பங்கேற்றால் அப்போது அது குறித்து முடிவு செய்வோம்" என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ரோஹித் சர்மாவுக்கான ஐபிஎல் வாய்ப்புகள் குறித்து பேசுகையில், ஒரு கட்டத்துக்கு மேல் முன்னணியில் இருக்கும் வீரர்களுக்கு பணம் ஒரு பொருட்டாகவே இருக்காது. அதை தாண்டி பல விஷயங்கள் அவர்களுக்கு தேவைப்படும். அதனால், ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு வெளியேற மாட்டார் எனக் கூறி இருந்தார்.
அஸ்வின் இந்திய அணியின் உள்விவகாரங்களை அறிந்தவர் என்பதால் அவரது கூற்றுப்படி ரோஹித் சர்மா பணத்துக்கு முக்கியம் அளிக்காமல் போகலாம். அதற்காகவே இந்த நான்கு அணிகளும் அவரை எப்படியாவது ஏலத்தில் பங்கேற்க வைக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது.