மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி தான் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், கடந்த சீசனில் மும்பை அணி வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்றும் இம்முறை முதல் அணியாக அவர்கள் பிளே ஆப் சுற்றுக்கு செல்வார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.
கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி 14 போட்டிகளில் வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று கடைசி இடத்தை பிடித்தது. இதற்கு காரணம் கேப்டன் மாற்றப்பட்டதால் வீரர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லாமல் இருந்ததாக கூறப்பட்டது.

தற்போது ஹர்பஜன் சிங் இதனை உறுதிப்படுத்தி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர், "ஒரு அணி எவ்வாறு செயல்படுகிறது என்பதை வைத்து தான் கேப்டன்களை அனைவரும் எடை போடுவார்கள். குஜராத் அணியின் இருந்தபோது ஹர்திக் பாண்டியா தலைமையில் அணி சிறப்பாக செயல்பட்டது. அப்போது அவரை அனைவரும் நல்ல கேப்டன் என்றார்கள்."
"கடந்த ஆண்டு மும்பை அணியில் இருந்த வீரர்களை பார்க்கும்போது அவர்கள் கண்டிப்பாக கோப்பையை கைப்பற்றி இருக்க வேண்டும். ஏனென்றால் அவ்வளவு திறமையான வீரர்கள் இருந்தார்கள். இந்த சீசனில் மும்பை அணியின் பவுலிங்கில் சில பேர் மிஸ் ஆகி இருக்கிறார்கள். ஆனால் நடப்பு தொடரிலேயே மிகவும் பலமான பேட்டிங் வரிசை கொண்ட அணி என்றால் அது மும்பை இந்தியன்ஸ் தான்."
"கடந்த சீசனில் அவர்கள் சரியாக விளையாடவில்லை. ஆனால் இம்முறை அவர்கள் அபாரமாக விளையாடுவார்கள். கடந்த சீசனில் அணியில் சில வீரர்கள் மீது அதிருப்தி இருந்தது. தற்போது அந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிட்டது. இது புதிய சீசன் என்பதால் ஒவ்வொரு வீரர்களும் ஒருங்கிணைந்து அணிக்காக விளையாடுவார்கள்."
"மும்பை இந்தியன்ஸ் அணியின் பலத்தை பார்க்கும்போது, பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக அவர்கள் தகுதி பெறுவார்கள் என நினைக்கின்றேன். மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடும்போது ஒரு நல்ல சுழற்ப்பந்துவீச்சாளர் தேவை. தற்போது மிட்செல் சாண்ட்னர் மற்றும் கரன் ஷர்மா ஆகியோர் இருக்கிறார்கள்.
இதேபோன்று தீபக்சாகர் நல்ல முறையில் பந்து வீசுகிறார். பந்தை நன்றாக ஸ்விங் செய்வார். எனவே பந்துவீச்சிலும் அவர்கள் திருப்திகரமாக தான் இருக்கிறார்கள்.ஹர்திக் பாண்டியாவை பார்த்து இனி ரசிகர்கள் எதிர்ப்பு குரல் கொடுக்க மாட்டார்கள். அதையெல்லாம் அவர் தாண்டி தன்னுடைய திறமையை நிரூபித்து விட்டார். எனவே மும்பை இந்தியன்ஸ் அணிக்கான சீசனாக இது இருக்கும்" என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.