மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பும்ரா நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. இந்த சூழலில் ஐபிஎல் தொடர் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ள நிலையில், பும்ரா முதல் இரண்டு வாரத்தில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க மாட்டார் என செய்திகள் வெளியாகி உள்ளது.
இதனால், வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பும்ரா இடம்பெறுவாரா மாட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் பும்ரா குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஷான் பாண்ட் ஒரு எச்சரிக்கை கொடுத்து இருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், "பும்ரா சிட்னி டெஸ்டில் ஸ்கேன்க்கு சென்றபோது நான் அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டு இருக்கும் என நினைத்தேன். ஏனென்றால் முதுகு பகுதியில் அவருக்கு எலும்பில் ஏதேனும் காயம் ஏற்பட்டிருக்கும். இதனால் அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க மாட்டார் என கணித்திருந்தேன்."
"தற்போது அவர் காயத்திலிருந்து மீண்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. பும்ரா மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பி விடுவார். ஆனால் என்னுடைய அனுபவத்திலிருந்து கொண்டு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். மீண்டும் முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டு அதற்கு அறுவை சிகிச்சை செய்யும் சூழல் வந்தால் அத்துடன் பும்ராவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டது என்று அர்த்தம்."
"ஏனென்றால் ஒரே இடத்தில் இருமுறை அறுவை சிகிச்சை செய்யக்கூடாது. அதிலிருந்து மீண்டு வருவது கடினம். எனவே பும்ராவை பிசிசிஐ சரியான முறையில் கையாள வேண்டும். பும்ராவை தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாட வைக்காதீர்கள். அவரை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்."
"2027 உலக கோப்பை வரை அவர் விளையாட வேண்டும் என்றால் பும்ரா டெஸ்ட் போட்டிகளில் அதிகம் பங்கேற்க கூடாது. உதாரணத்திற்கு இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது என்றால் அதில் குறைந்தபட்சம் அவர் மூன்று டெஸ்ட் போட்டிகளில் தான் விளையாட வேண்டும்."
"ஒரு நாள் கிரிக்கெட் தொடர் பொறுத்தவரை ஒரு வாரத்தில் மூன்று போட்டிகள் நடைபெறும். இதில் அதிகபட்சமாக அவர் 30 ஓவர் வீசுவார். பயிற்சி முகாமில் சில ஓவர்கள் வீசுவார். இது ஒரு டெஸ்ட் போட்டிக்கு வீசப்படும் ஓவர் தான். இதேபோன்று டி20 தொடரிலும் பும்ரா அதிகபட்சமாக ஒரு தொடரில் 20 ஓவர் வீசுவார். அது டெஸ்ட் போட்டியை ஒப்பிட்டால் கால்வாசி தான்."
"ஆனால் பிரச்சனை எங்கு வரும் என்றால் இப்போது பும்ரா ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடிவிட்டு மீண்டும் டெஸ்ட் போட்டிக்கு திரும்பும்போது அவரால் தொடர்ந்து ஓவர்களை வீச முடியாது. அப்படி செய்தால் மீண்டும் அவருக்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் வீரர்கள் பொறுத்தவரை கண்டிப்பாக நான் அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்று தான் நினைப்பார்கள். ஆனால் அது மிகப்பெரிய ரிஸ்கை பின்னர் தான் கொடுக்கும் என என் அனுபவத்திலிருந்து இதைச் சொல்கிறேன்" என்று சேன் பாண்ட் கூறியுள்ளார்.