ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, திமிர் பிடித்தவராக மாறிவிட்டார் என்ற விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகரித்து வருகின்றன. நேற்றைய ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியைச் சேர்ந்த அபினவ் மனோகர், பும்ராவின் ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்தார். அதன் பின்னர் பும்ரா ஒரு லோ ஃபுல் டாசை வீசினார். அபினவ் மனோகர் அந்தப் பந்தை எதிர்கொள்ள முடியாமல் திணறினார். அந்தப் பந்து அவரது வயிற்றுப் பகுதியில் தாக்கியது. அபினவ் மனோகர் வலியால் சுருண்டு விழுந்தார்.

அப்போது பும்ரா, எதுவுமே நடக்காதது போல, தனது பந்துவீச்சு மார்க்கை நோக்கி நடந்து சென்றார். இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பும்ராவுக்கு மனிதநேயம் இல்லையா? ஏன் இப்படி நடந்து கொள்கிறார்? என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கு முன்பு டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கருண் நாயர், பும்ராவின் பந்துவீச்சில் சிக்ஸர்கள் அடித்தார். அப்போது கோபமடைந்த பும்ரா அவருடன் வாக்குவாதம் செய்தார். அதேபோல, இப்போதும் அபினவ் மனோகர் பும்ராவின் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்ததால், கோபமடைந்த பும்ரா ஃபுல் டாசை வீசி அபினவ் மனோகரைத் தாக்கியும், எதுவும் நடக்காதது போல நடந்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக பந்துவீச்சாளர்கள் பேட்ஸ்மேன்கள் மீது பந்து தாக்கிவிட்டால், உடனடியாக பேட்ஸ்மேனிடம் சென்று என்ன நடந்தது என விசாரிப்பது வழக்கம். பிசியோதெரபிஸ்ட்டை அழைப்பார்கள். ஆனால், பும்ரா இது போன்ற எந்த நடவடிக்கையும் செய்யவில்லை. இதையடுத்து, பும்ரா திமிர் பிடித்தவராக மாறிவிட்டாரா? ஏன் இப்படி நடந்து கொள்கிறார்? என சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மேலும், தனது ஓவரில் சிக்ஸர் அடித்ததை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றும், இது விளையாட்டு உணர்வுக்கு எதிரானது எனவும் சிலர் சுட்டிக்காட்டி உள்ளனர். நேற்றைய போட்டியில் பும்ரா நான்கு ஓவர்களில் 39 ரன்களை விட்டுக்கொடுத்து, ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம், மும்பை இந்தியன்ஸ் அணியின் சக வேகப்பந்து வீச்சாளர்களான தீபக் சாகர் மற்றும் ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் சிறப்பாக பந்துவீசினர். தீபக் சாகர் நான்கு ஓவர்களில் 12 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். ட்ரெண்ட் போல்ட் நான்கு ஓவர்களில் 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அவர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
பும்ரா சமீபத்தில்தான் காயத்திலிருந்து மீண்டு வந்திருப்பதால், அவர் இன்னும் தனது முழுத் திறனையும் வெளிப்படுத்தவில்லை என விமர்சகர்கள் கருதுகின்றனர். இனிவரும் போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்படுவாரா? என பார்க்கலாம்.