மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போல் மும்பை இந்தியன்ஸ் அணியும் இதுவரை மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங், பந்துவீச்சு பலமாக தான் இருக்கிறது. சில தவறுகளை செய்வதால் அவர்கள் தோல்வியை தழுவுகிறார்கள்.
இந்த சூழலில் மும்பை இந்தியன்ஸ் அணியில் வீரர்களுக்கிடையே ஒற்றுமை இல்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. ரோகித் சர்மா கேப்டன் ஆக இருந்தபோது ஹர்திக் பாண்டியா கேப்டனாக மாற்றப்பட்டது தான் இதற்கு ஆரம்ப புள்ளியாக இருக்கிறது.

இதனால் மும்பை அணியில் ரோகித் அணி, ஹர்திக் அணி என இரண்டு பிரிவுகள் இருப்பதாகவும் இதன் காரணமாகத்தான் கடந்த போட்டியில் ரோகித் சர்மாவை ஹர்திக் பாண்டியா வெளியே உட்கார வைத்து விட்டார் என்றும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஹர்திக் பாண்டியா பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார்.
அதில் தனது மொபைல் போனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் 3 ஜாம்பவான்களின் புகைப்படத்தை வைத்திருப்பதாகவும், தமக்கு மும்பை அணி பிடித்த அணி என்றும் கூறியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர், நான் அப்போதிலிருந்து மும்பை அணியின் ரசிகன் தான். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி என்னை தேர்வு செய்து விட்டது என்ற செய்தி கேட்டவுடன் நான் மகிழ்ச்சியில் இருந்தேன்.
எனது மொபைல் போனில் ஒரு புகைப்படத்தை வைத்திருப்பேன். அதில் சச்சின், ஹர்பஜன் மற்றும் மலிங்கா ஆகியோரின் முகம் இருக்கும் நான் மும்பை அணியின் தீவிர ரசிகன் என்பதால் இந்த அணியில் வாய்ப்பு கிடைத்தவுடன் என்னை அது சிறப்பாக விளையாடத் தூண்டியது. என்னுடைய பயணமும் இங்கிருந்துதான் ஆரம்பித்தது என்று ஹர்திக் பாண்டியா கூறியிருக்கிறார்.
ஹர்திக் பாண்டியாவின் இந்த வீடியோ தற்போது சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பை அணிக்கு கோப்பையை வாங்கி கொடுத்தது ரோகித் சர்மா தான் என்றும், ஆனால் ரோகித் சர்மாவின் பெயரையே ஹர்திக் பாண்டியா குறிப்பிடாமல் இருப்பதை சுட்டிக்காட்டி ரசிகர்கள் அவரை வெளுத்து வருகின்றனர். ரோகித் சர்மாவை தற்போது அல்ல ஆரம்பகாலத்தில் இருந்தே ஹரிதிக் பாண்டியாவிற்கு பிடிக்காது போல என்றும் இந்த பேட்டியை குறிப்பிட்டு ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.