மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இந்த முறை தான் பேட்டிங் செய்ய வரும்போதும், டாஸ் போட வரும்போதும் உற்சாகக் குரல்களை எழுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டு நடந்த மோசமான விஷயங்களை மனதில் கொண்டு அவர் இந்த கோரிக்கையை வைத்துள்ளார்.
2024 ஐபிஎல் தொடரின்போது மும்பை இந்தியன்ஸ் அணி மிக மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டது. அந்த அணியின் மூத்த வீரரும், பத்து ஆண்டுகள் கேப்டனாக இருந்தவருமான முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது. அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது.

அப்போது ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் திரும்பினார். கேப்டன் பதவி அளித்தால் தான் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வருவேன் என அவர் கூறியதாக அப்போது சர்ச்சை எழுந்தது. அதனால், ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டதாக ரசிகர்கள் கோபம் கொண்டனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்கள் பலரும் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக திரும்பினர். அவர் எப்போது ஆடுகளத்துக்கு வந்தாலும் அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவர் டாஸ் போட வரும்போதும், பேட்டிங் செய்ய வரும்போதும், ஃபீல்டிங்கில் சில தவறுகளை செய்தாலும் பெருமளவில் கோஷம் எழுப்பி அவருக்கு அழுத்தம் அளித்தனர்.
ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடும் கடந்த ஆண்டு மிக மோசமாக இருந்தது. மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த ஆண்டு புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை மட்டுமே பிடித்தது. இந்த நிலையில் தற்போது ஹர்திக் பாண்டியா தொடருக்கு முன்பே ரசிகர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து ஹர்திக் பாண்டியா பேசியதாவது: "நான் பேட்டிங் செய்ய வரும்போது எனக்காக உற்சாகக் குரல்களை எழுப்புங்கள். நான் சிக்ஸ் அடிக்கும்போது எனக்காக உற்சாக குரல்களை அனுப்புங்கள். நான் டாஸ் போட வரும்போது உற்சாகமளியுங்கள். மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்ஸி நிறத்தைத் தவிர வேறு எந்த நிறத்தையும் நான் வான்கடே மைதானத்தில் பார்க்க விரும்பவில்லை. இதுதான் நான் கேட்டுக்கொள்வது" என கூறியுள்ளார். கடந்த ஆண்டு நடந்த சம்பவங்களை நினைத்து அவர் இன்னும் நொந்து போய் இருக்கிறார் என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.
செய்தி சுருக்கம்: