மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் 10 அணிகளும் தங்களது வீரர்களை தக்க வைத்து கொண்ட பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறார்கள். இதில் யாருமே எதிர்பாராத படி ரிஷப் பண்ட், கே.எல். ராகுல் போன்ற வீரர்கள் எல்லாம் தங்களது அணியில் இருந்து வெளியேறிய நிலையில் சில வீரர்கள் அணிக்காக தங்களுடைய சம்பளத்தை விட்டுக் கொடுத்து இருக்கிறார்கள்.
மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை ரோகித் சர்மா வேறு அணிக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் ரோகித் சர்மா 18 கோடி சம்பளத்திலிருந்து 16 கோடியே 30 லட்சம் ரூபாயாக தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொண்டிருக்கிறார்.

விராட் கோலியின் சம்பளம் 21 கோடி ரூபாயாக உயர்ந்துள்ள நிலையில் ரோகித் சர்மாவின் சம்பளம் குறைக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரோகித் சர்மா, மும்பையில் தான் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை ஆரம்பித்தது. மும்பை மைதானங்களில் நான் பல கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கின்றேன்.
மும்பை நகரம் என்னுடைய மனதிற்கு மிகவும் நெருங்கிய ஊராகும். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நான் பல ஆண்டுகள் விளையாடி விட்டேன். இங்கு என்னுடைய பல நல்ல நினைவுகளை சம்பாதித்து இருக்கின்றேன். எனினும் கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாக மும்பை அணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. எங்களுடைய சிறந்த சீசனாக அது அமையவில்லை.
இதனால் இம்முறை மீண்டும் அதனை மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளில் இருக்கின்றேன். தற்போது நான் சர்வதேச டி20 கிரிக்கெட் இல் இருந்து ஓய்வு பெற்று விட்டேன். இதனால் இந்திய அணிக்காக விளையாட போகும் மற்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பதால்தான் நான் இந்த முடிவை எடுத்து இருக்கின்றேன்.நான் எடுத்த முடிவு நினைத்து நான் மகிழ்ச்சி கொள்கின்றேன். இது எனக்கு சரியான விஷயமாக தெரிகிறது என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்திக் பாண்டியா மும்பையில் தான் எனக்கு அதிக அளவு அன்பு கிடைத்தது. மும்பை இந்தியன்ஸ் அணி தான் எனக்கு உலகம். இந்த ஆண்டு ஒரு ஸ்பெஷலான ஆண்டாக அமையும் என்று நான் நம்புகிறேன். மும்பை அணி வீரர்களுக்கு இடையே சகோதரத்துவமும், நட்பும் எப்போதும் இருக்கின்றது. நாங்கள் அனைவரும் ஒரு கையில் இருக்கும் ஐந்து விரல்கள் போல் இருக்கின்றோம் என்றும் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.