மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் பிளாக்பஸ்டர் போட்டியாக இன்று மும்பை இந்தியன்ஸ் அணியும் ஆர்சிபி அணியும் பல பரிட்சை நடத்துகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்து வீசுவதாக கூறினார்.
இது குறித்து பேசிய அவர், நாங்கள் இன்றைய ஆட்டத்தில் முதலில் பந்து வீசப் போகிறோம். ஆடுகளம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கின்றது. பனிப்பொழிவு இரவு நேரத்தில் இருக்கும் என்பதால் நாங்கள் முதலில் பந்து வீசுகிறோம். ஏனென்றால் இரவு நேரத்தில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறிவிடும்.

நாங்கள் இரு அணிகளுமே சிறப்பாக விளையாடி இருக்கின்றோம். நாங்கள் நல்ல கிரிக்கெட்டை மீண்டும் விளையாடுவதற்கு ஆயத்தமாக இருக்கின்றோம். சரியான விஷயத்தை களத்தில் செய்ய வேண்டும். மும்பை ரசிகர்கள் எங்களுக்கு எப்போதுமே ஆதரவு அளிப்பார்கள்.
மும்பையில் எதிரணிகள் விளையாடும் போது அவர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்படும். ஏனென்றால் ஒட்டுமொத்த ரசிகர்களுமே எங்களுக்கு ஆதரவாக நிற்பார்கள். இதேபோன்று எங்கள் அணியில் இன்று பும்ரா மற்றும் ரோகித் சர்மா என இருவருமே திரும்பி இருக்கிறார்கள் என்று ஹர்திக் பாண்டியா கூறினார். இதனை தொடர்ந்து பேசிய ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார், இது வழக்கமான மும்பை ஆடுகளம் போல் இருக்கின்றது.
இங்கு பேட்டிங் செய்து ரன் குவிப்பது என்பது நல்ல விஷயமாக இருக்கும். இங்கு நல்ல கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது மிகவும் முக்கியம். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் நல்ல முறையில் செயல்பட வேண்டும். இந்த ஆடுகளத்தில் பந்து வீசுவது என்பது நிச்சயம் கடினம்தான். ஆனால் எங்கள் வீரர்கள் அதை சரியாக செய்வார்கள் என்று நம்புகிறேன்.
நாங்கள் கடந்த சில போட்டிகளாக நன்றாக விளையாடி வருகின்றோம். ஒவ்வொரு ஆடுகளத்திலும் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு நன்றாக தெரியும். எங்கள் அணியில் இன்று எந்த மாற்றமும் இல்லை என்று ரஜத் பட்டிதார் கூறியுள்ளார். ஹர்திக் பாண்டியா இன்று விளையாடுகிறார் என்று அறிவிக்கப்பட்டாலும், அவர் இம்பேக்ட் வீரராக தான் களமிறங்குவார் என்பது தெரியவந்துள்ளது.