மும்பை: மும்பை அணியின் பவுலிங் பயிற்சியாளராக இந்திய முன்னாள் பயிற்சியாளர் பராஸ் ஆம்ரே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இலங்கை ஜாம்பவான் லசித் மலிங்கா பயிற்சியாளராக செயல்பட்டு வரும் நிலையில், தற்போது பராஸ் ஆம்ரேவும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
2020ஆம் ஆண்டுக்கு பின் மும்பை அணி தொடர்ச்சியாக பின்னடைவை சந்தித்து வருகிறது. கடந்த 4 சீசன்களில் ஒரேயொரு முறை மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு மும்பை அணி முன்னேறியுள்ள நிலையில், 2 முறை கடைசி இடத்தில் நிறைவு செய்துள்ளது. இதனால் மும்பை அணியின் உரிமையாளர்களான ஆகாஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானி இருவரும் இம்முறை பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் மும்பை அணியின் பயிற்சியாளராக இருந்து வந்த மார்க் பவுச்சர் 3 நாட்களுக்கு முன்பாக நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக மும்பை அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளரான மஹேலா ஜெயவர்தனே கொண்டு வரப்பட்டார். இதன் மூலமாக மும்பை அணியின் சீனியர் வீரர்களுக்கு இடையில் நிலவும் ஈகோ பிரச்சனையை எளிதாக முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று பார்க்கப்படுகிறது.
அதேபோல் பவுலிங் பயிற்சியாளர் லசித் மலிங்கா செயல்பட்டு வந்த சூழலில், தற்போது இன்னொரு பவுலிங் பயிற்சியாளரையும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த பராஸ் ஆம்ரே மும்பை அணியுடன் கைகோர்த்துள்ளார்.
இவர் ஏற்கனவே மும்பை அணியுடன் 2008 முதல் 2016 வரை பயணித்து வந்தனர். அதன்பின் யு19 இந்திய அணி, இந்திய அணி என்று ராகுல் டிராவிட் உடன் இணைந்து பயணிக்க தொடங்கினார். இவரும் லசித் மலிங்காவும் இணைந்து பயணிக்கவுள்ளனர். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை அணி நிர்வாகத்தில் இன்னும் என்ன மாற்றங்கள் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதனிடையே மும்பை அணியில் ஒன்றுக்கு 2 பவுலிங் பயிற்சியாளர்கள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் பிராவோவின் இடத்திற்கு யார் கொண்டு வரப்படுவார்கள் என்பதே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆல்பி மோர்கல், பாலாஜி உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டாலும், சிஎஸ்கே அணி நிர்வாகம் அமைதி காப்பது அந்த அணி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது சிஎஸ்கே அணியில் தலைமைப் பயிற்சியாளராக பிளெம்மிங், பவுலிங் ஆலோசகராக எரிக் சிம்மன்ஸ், பேட்டிங் பயிற்சியாளராக மைக் ஹசி உள்ளிட்டோர் இருந்து வருகின்றனர். இவர்கள் எஸ்ஏ20 லீக், எம்எல்சி உள்ளிட்ட லீக் போட்டிகளிலும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இதனால் சிஎஸ்கே பவுலிங் பயிற்சியாளருக்கான அறிவிப்பு வெளியாக இன்னும் சில மாதங்கள் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.