லக்னோ: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் 16வது லீக் ஆட்டம் இன்று லக்னோவில் நடைபெறுகிறது. இதில் ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், நாங்கள் முதலில் பந்து வீசப் போகிறோம். இந்த ஆடுகளம் புத்துணர்ச்சியுடன் இருக்கின்றது. இது எவ்வாறு செயல்படும் என்று எங்களுக்கு தெரியவில்லை. ஓரளவுக்கு திருப்திகரமாக இருக்கும் என நினைக்கின்றேன். லக்னோவில் பனிப்பொழிவு இரவு நேரத்தில் அதிகமாக இருக்கும்.

இதனால் நாங்கள் சேஸ் செய்யவே விரும்புகின்றோம். நாங்கள் விக்கெட் விழுவதை பற்றி யோசிக்க மாட்டோம். அதைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதும் இல்லை. நாங்கள் இங்கு நல்ல கிரிக்கெட் விளையாட தான் வந்திருக்கிறோம். அதை தான் நாங்கள் அணி கூட்டத்தில் பேசுவோம். இதைப் போன்று ஆடுகளம் எவ்வாறு இருக்கிறது என்பதை பற்றியும் கண்டு கொள்ள மாட்டோம்.
ஒவ்வொரு ஆடுகளத்திற்கும் ஏற்ற மாதிரி வீரர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். ஸ்மார்ட்டாக இருந்து விளையாட வேண்டும். திட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். கிரிக்கெட் என்பது சூழலுக்கு ஏற்ற வகையில் விளையாடக்கூடிய போட்டி ஆகும். இந்த தொடரில் அதிக ரன்கள் குவிக்கப்பட்டு வருகிறது. எனினும் சூழலுக்கு தகுந்த மாதிரி விளையாட வேண்டும். இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா விளையாடவில்லை. அவர் பயிற்சியின் போது முட்டி பகுதியில் அவருக்கு அடிபட்டுவிட்டது.
இதனால் அவர் இந்த ஆட்டத்தில் பங்கேற்கவில்லை என்று ஹர்திக் பாண்டியா கூறினார். இதனை தொடர்ந்து பேசிய ரிஷப் பன்ட் ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் நல்ல நம்பிக்கையுடன் இருக்கின்றோம். எங்கள் அணியில் பலம் வாய்ந்த பேட்டிங் வரிசை கொண்டது. எனினும் ஒரு சிலர் இன்னும் பார்முக்கு வரவில்லை. நான் உட்பட இருப்பினும் நாங்கள் எங்களுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்.
எந்த இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்பது குறித்து எல்லாம் நாங்கள் பேசவில்லை. பந்தை பார்த்து விளையாடுங்கள். பந்திற்கு ஏற்ற வகையில் விளையாடுங்கள் என்றுதான் நான் சொன்னேன். நானும் நம்பிக்கையாக இருக்கின்றேன். இது நீண்ட நெடிய தொடர். ஒருமுறை நான் பார்ம்க்கு வந்து விட்டால், அதை நன்றாக பயன்படுத்திக் கொள்வேன் எங்கள் அணியில் இன்று சித்தார்த்துக்கு பதிலாக ஆகாஷ் தீப் வந்திருக்கிறார் என்று பண்ட் கூறியுள்ளார்.