மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு செல்வார் என்று தகவல் வெளியானது. 38 வயதான ரோஹித் சர்மா கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
இதனால் ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடர விரும்பவில்லை என்ற தகவல் வெளியானது. மேலும் லக்னோ, பஞ்சாப் போன்ற அணிகள் ரோகித் சர்மாவை குறி வைத்து ஏலத்தில் எடுக்கலாம் என செய்தி வெளியானது.

இந்த நிலையில் ரோகித் சர்மாவை விடுவிக்க மும்பை இந்தியன்ஸ் அணி விருப்பம் இல்லை என திட்டவட்டமாக கூறிவிட்டது. ரோகித் சர்மா வருகைக்கு பின்பு தான் மும்பை அணி ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனால் ரோகித் சர்மா இருக்கும் வரை அவர் மும்பை அணி தான் தொடர வேண்டும் என்றும் இதற்காக எத்தனை கோடி வேண்டுமானாலும் செலவழிக்க தயாராக இருப்பதாக மும்பை நிர்வாகம் உறுதியாக இருந்திருக்கிறது.
அதன்படி ரோகித் சர்மாவை முதல் வீரராக 18 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக் கொள்ள மும்பை அணி முடிவெடுத்திருக்கிறது. இதன் மூலம் ரோகித் சர்மாவின் ஊதியம் 16 கோடி ரூபாயிலிருந்து 18 கோடி ரூபாயாக உயர போகிறது. ஒவ்வொரு அணியும் அதிக வீரர்களை தக்க வைக்கும் போது கையிருப்பு தொகை குறைவாக இருக்கும் என்பதால் ரோகித் சர்மாவுக்கு எதிர்பார்த்த சம்பளம் கிடைக்காத சூழல் ஏற்பட்டிருக்கிறது.
இதனால் மும்பை அணி வழங்கும் 18 கோடி ரூபாய் வாங்கிக்கொண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இரண்டு சீசன்களின் விளையாடலாம் என்ற முடிவில் ரோகித் சர்மா இருக்கிறார். அது மட்டுமல்லாமல் ரோகித் சர்மாவுக்கு மிகவும் நெருங்கிய நண்பரும் முன்னாள் மும்பை அணியின் பயிற்சியாளருமான ஜெயவர்த்தனை தற்போது மீண்டும் பயிற்சியாளராக திரும்பி இருக்கிறார்.
இதன் காரணமாக ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணி சாதாரண வீரராக தொடர முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் அக்டோபர் 30-ஆம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது. கடந்த ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா ஒரு சதம் உள்ளிட்ட 417 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.