லக்னோ: "திலக்கு தூக்கம் வருது திலக்கு" என மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்வியை மீம்ஸ் போட்டு கேலி செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள். நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அதிரடியாக ஆடி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தபோது சூர்யகுமார் யாதவ் மற்றும் நமன் திர் அதிரடியாக ஆடினார்கள். ஆனால், அவர்கள் விக்கெட்டை இழந்த பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி இலக்கை எட்ட முடியாமல் திணறியது.

அப்போது களத்தில் இருந்த திலக் வர்மா 23 பந்துகளில் 25 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அவரால் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட முடியவில்லை. இதை அடுத்து மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் "திலக்கு தூக்கம் வருது திலக்கு" என கிண்டல் செய்வது போல மீம்ஸ் வெளியிட்டுள்ளனர். பின்னர் அவர் ரிட்டயர் ஹர்ட் ஆகி வெளியே அனுப்பப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த போட்டியில் மிட்செல் சாண்ட்னர் நான்கு ஓவர்களில் 46 ரன்கள் விட்டுக் கொடுத்தார். அவரை கடந்த ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விடுவித்து இருந்த நிலையில் அது குறித்தும் மீம்ஸ் போட்டு உள்ளனர். "இவரை ஏன் சிஎஸ்கே வெளியேற்றியது என இப்போது புரிகிறதா?" என மீம் வெளியிட்டுள்ளனர்.
அடுத்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங்கில் அதிரடியாக ஆடிய நிலையில் அதை ரோஹித் ரசிகர்கள் சந்தோஷத்துடன் பார்ப்பதாக ஒரு மீம் வெளியிட்டுள்ளனர். இந்த போட்டியில் இருந்து ரோஹித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் நீக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்வியை ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பார்த்ததாக இந்த மீம் சுட்டிக்காட்டுகிறது.

சமீப காலமாக மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் அதற்கு முக்கிய காரணமே கீரான் பொல்லார்டை அந்த அணி ஓய்வு பெற வைத்தது தான் என சிஎஸ்கே ரசிகர்கள் சுட்டிக்காட்டுவது போல ஒரு மீம் வெளியிடப்பட்டுள்ளது. கீரான் பொல்லார்ட் உலகின் பல்வேறு டி20 லீக் தொடர்களில் இன்னமும் விளையாடி வருகிறார்.
ஆனால், ஐபிஎல் தொடரில் மட்டும் அவர் ஓய்வு பெற்று மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி ஏழு போட்டிகளில் விளையாடி, அதில் ஆறில் தோல்வி அடைந்து இருக்கிறது. இதை வைத்து "அவர்கள் அடி கொடுக்கும் பரம்பரை, நாம் அடி வாங்கும் பரம்பரை" என ஹர்திக் பாண்டியா சொல்வது போல ஒரு மீமை வெளியிட்டுள்ளனர்.