மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி சாதிக்க வேண்டிய உத்வேகத்தில் இருக்கிறார்கள். சிஎஸ்கே அணி கடந்த தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாத நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த நான்கு சீசன்களாக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது.
இதனால் இவ்விரு அணிகளும் இம்முறை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இதற்கு ஏற்றார் போல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்ட நிலையில் அந்த அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த சூழலில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஒன்று ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா ஸ்லோ ஓவர்ரேட் மூலம் விதிக்கப்பட்ட தடை காரணமாக சிஎஸ்கேவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது.
இந்த சூழலில் மும்பை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான பும்ராவுக்கு ஏற்பட்டுள்ள காயம் இன்னும் குணமாகவில்லை. இதன் காரணமாக பும்ரா தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்கி பயிற்சி செய்து வருகிறார்.இதனால் பும்ரா ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு வாரத்திற்கு எந்தவித போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.
இதன் மூலம் பும்ரா ஏப்ரல் மாதத்தில் முதல் வாரத்திற்கு பிறகு தான் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைவார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிசிசிஐ நிர்வாகி ஒருவர், "பும்ராவின் மருத்துவ ரிப்போர்ட்கள் எல்லாம் நன்றாகத் தான் இருக்கின்றது."
"பும்ரா தற்போது பந்துவீச்சு பயிற்சியின் ஈடுபட்டு வருகிறார். ஆனால் பும்ரா ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் பந்து வீசுவது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. தற்போது இருக்கும் நிலவரப்படி பும்ரா ஐபிஎல் தொடரில் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தான் விளையாடுவார் என தெரிகிறது" என்று கூறியுள்ளார். இதேபோன்று ரோகித் சர்மா மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவாரா என தெரியவில்லை. இதனால் அவருக்கு பதில் பும்ரா தான் கேப்டனாக செயல்பட வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பு பும்ரா முழு உடல் தகுதியுடன் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்.