மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ரோஹித் சர்மா விலகுவார் என பரவலாக கருத்துக்கள் பரவி வந்தன. ரோஹித் சர்மா ஏலத்தில் பங்கு பெற்றால் அவரை வாங்குவதற்கு சில ஐபிஎல் அணிகள் 50 கோடி வரை செலவு செய்ய தயாராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில், ரோஹித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் தக்க வைக்கும் என்ற அதிரடி தகவல் வெளியாகி உள்ளது. ஏன் இந்த மாற்றம்?
2024 ஐபிஎல் தொடருக்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ரோஹித் சர்மாவின் காலம் முடிந்துவிட்டதாக கருதியது. இனி இளம் கேப்டன் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று நினைத்தது. அதன் காரணமாகவே, ஹர்திக் பாண்டியாவை அந்த அணி கேப்டன் ஆக நியமித்தது. ஆனால், ஹர்திக் பாண்டியாவால் அனுபவ வீரர்கள் அடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியை சரியாக வழிநடத்திச் செல்ல முடியவில்லை.

2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி லீக் சுற்றின் முடிவில் கடைசி இடத்தை மட்டுமே பெற்றது. அதே சமயம், ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ரோஹித் சர்மா இந்திய அணியை 2024 டி20 உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக வழி நடத்தினார். அத்துடன் இந்திய அணிக்கு உலகக் கோப்பையையும் வென்று கொடுத்தார்.
அப்போதே மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தாங்கள் செய்த தவறை உணர்ந்து விட்டதாவும், அதனால் அவரை 2025 ஐபிஎல் ஏலத்திற்கு முன் தக்க வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ரோஹித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் தக்க வைத்தால், அவருக்கு மீண்டும் கேப்டன் பதவி அளிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே, ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்ததில் தான் பிரச்சனை வெடித்தது. மீண்டும் ஹர்திக் பாண்டியா தலைமையில் ரோஹித் சர்மா ஆடுவாரா? என்ற கேள்வியும் உள்ளது. எனவே, 2025 ஐபிஎல் தொடரில் யாரை கேப்டனாக நியமிப்பது? என்பதில் மட்டும் குழப்பம் நீடிப்பதாக கூறப்படுகிறது.
கடந்த ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியில் மும்பை இந்தியன்ஸ் மோசமாக செயல்பட்டு இருந்ததால் அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, ரோஹித் சர்மாவை மீண்டும் கேப்டனாக நியமிக்க வாய்ப்பு உள்ளது. ஒருவேளை இளம் கேப்டனை நியமிக்க வேண்டும் என முடிவு செய்தால் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சூர்யகுமார் யாதவ் அல்லது பும்ராவை மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக நியமிக்க வாய்ப்பு உள்ளது.
இதில் இன்னொரு சிக்கலும் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மாவை தக்க வைக்க நினைத்தாலும், ரோஹித் சர்மா அதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும். அவருக்கு விருப்பம் இல்லை என்றால் அவரை விடுவிப்பதை தவிர அந்த அணிக்கு வேறு வழியில்லை. தற்சமயம் டெல்லி கேபிடல்ஸ் அணி ரோஹித் சர்மாவை ஏலத்தில் வாங்குவதில் உறுதியாக உள்ளது. ரோஹித் சர்மா ஏலத்தில் பங்கேற்றால் மட்டும் போதும். அவரை எத்தனை பெரிய தொகை கொடுத்தாவது வாங்க வேண்டும் என அந்த அணி தீர்மானித்து இருப்பதாக ஐபிஎல் வட்டாரத்தில் பேசப்படுகிறது,