மும்பை: 2025 ஐபிஎல் மெகா ஏலத்தின் போது 50 கோடி கொடுத்து ரோஹித் சர்மாவை வாங்க சில அணிகள் தயாராக இருந்தன. ஆனால், இப்போது 50 கோடியெல்லாம் கொடுக்க முடியாது என்ற மனநிலைக்கு அந்த அணிகள் மாறிவிட்டன. இடையில் என்ன நடந்தது? சில நாட்களுக்கு முன்பு 2025 ஐபிஎல் மெகா ஏலத்துக்கான விதிகள் அறிவிக்கப்பட்டன.
அதில் சில விதிகள் ஐபிஎல் அணிகளை சிக்கலில் ஆழ்த்தி உள்ளன. குறிப்பாக ஐபிஎல் ஏலத்திற்கான ஒட்டுமொத்த செலவுத் தொகை 120 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அந்தத் தொகை 140 கோடியாக இருக்கும் என ஐபிஎல் அணிகள் எதிர்பார்த்தன. ஆனால், பிசிசிஐ அதிகபட்சமாக வீரர்களுக்காக 120 கோடியை மட்டுமே சம்பளமாக கொடுக்க முடியும் என அறிவித்து இருக்கிறது.

மேலும், ஒரு அணி ஆறு வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம் எனவும் அறிவித்து இருக்கிறது பிசிசிஐ. இது ஐபிஎல் அணிகளுக்கு சாதகமான விஷயமாக வெளியில் தெரிந்தாலும், அந்த ஆறு வீரர்களையும் தக்க வைக்க 79 கோடியை ஒரு அணி செலவு செய்ய வேண்டும். அதாவது ஒவ்வொரு அணிக்குமான 120 கோடி செலவுத் தொகையில் 79 கோடியை 6 வீரர்களை தக்க வைக்க மட்டுமே ஒரு அணி செலவு செய்ய வேண்டி இருக்கும்.
அதனால், எந்த அணியும் ஆறு வீரர்களை தக்க வைக்காது என தெரிகிறது. அதே சமயம் ஒவ்வொரு அணியும் தங்களின் முக்கியமான ஒன்று அல்லது இரண்டு வீரர்களை தக்க வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அப்படி ஒரு அணி இரண்டு வீரர்களை மட்டும் தக்க வைத்தால் முதல் வீரருக்கு 18 கோடியும், இரண்டாவது வீரருக்கு 14 கோடியும் வழங்க வேண்டி வரும்.
அதன் மூலம் மொத்தமாக 32 கோடியை இரண்டு வீரர்களுக்கு மட்டுமே செலவு செய்ய வேண்டி இருக்கும். அதன் பின்பு ரோஹித் சர்மாவுக்காக 50 கோடியை ஏலத்தில் கேட்பது என்பது நடக்காத விஷயம் தான். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் தான் ரோஹித் சர்மாவை ஐபிஎல் மெகா ஏலத்தில் வாங்கி தங்கள் அணியின் கேப்டனாக நியமித்துக் கொள்ளலாம் என்று கனவில் இருந்தன.
இந்த இரண்டு அணிகள் தான் ரோஹித் சர்மாவுக்காக ஐபிஎல் ஏலத்தில் 50 கோடி வரை கேட்கத் தயாராகி இருந்தன. ஆனால், தற்போது ஐபிஎல் மெகா ஏல விதிகளால் இந்த அணிகள் அந்த முடிவில் இருந்து பின்வாங்கி உள்ளன. ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணி விடுவிக்குமா? அவர் ஏலத்தில் பங்கேற்பாரா? என்பது புரியாத புதிராக உள்ளது. ரோஹித் சர்மா ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்றாலும் அவருக்கான ஏலத் தொகை என்பது 50 கோடியை எட்ட வாய்ப்பு இல்லை என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது .