மும்பை: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நெருங்கி வரும் சூழலில், மும்பை அணி தனது பயிற்சியாளர்கள் குழுவில் மாற்றத்தை கொண்டு வர தயாராகிவிட்டது. அதன்படி முதற்கட்டமாக பவுலிங் பயிற்சியாளராக அனுபவ வாய்ந்த பராஸ் ஆம்ரே நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.
2020ஆம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதன்பின் 4 ஆண்டுகள் முடிவடைந்த போதும், மும்பை அணியால் ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு கூட முன்னேற முடியவில்லை. அதிலும் 2022 சீசனில் மும்பை அணி தொடர்ச்சியாக 8 போட்டிகளில் தோல்வியடைந்தது. அதேபோல் கடந்த சீசனில் 10வது இடத்தை நிறைவு செய்தது.

குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை அணிக்கு கொண்டு வந்த போதும், அந்த அணியால் கம்பேக் கொடுக்க முடியவில்லை. அதேபோல் மும்பை அணி ரசிகர்களும் ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக இருப்பதால், அந்த அணியின் உரிமையாளர்கள் கவலையடைந்து இருக்கின்றனர். இதனால் மெகா ஏலத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதில் மும்பை அணி தீவிரமாக உள்ளது.
அதேபோல் ஜெயவர்தனேவுக்கு பின் மும்பை அணியின் பயிற்சியாளராக வந்த மார்க் பவுச்சரின் செயல்பாடுகள் விமர்சனத்தை பெற்று வருகின்றன. பேட்டிங் பயிற்சியாளராக பொல்லார்ட், பவுலிங் பயிற்சியாளராக லசித் மலிங்கா இருந்து வருகின்றனர். இந்த நிலையில் மும்பை அணி நிர்வாகம் தரப்பில் பயிற்சியாளர்களில் மாற்றம் கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளராக பராஸ் ஆம்ரேவை மும்பை அணி பவுலிங் பயிற்சியாளராக நியமிக்க முடிவு செய்து ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக இந்திய அணியுடன் பயணித்து வந்த பராஸ் ஆம்ரே, முகமது ஷமி, முகமது சிராஜ் உள்ளிட்ட வேகப்பந்துவீச்சாளர்களின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருந்தார்.
இவர் ராகுல் டிராவிட்டுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென தனது தாய் வீடான மும்பை அணிக்கு திரும்பியுள்ளார். 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட போது மும்பை அணியின் பவுலிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தவர் பராஸ் ஆம்ரே தான். ஏனென்றால் ரஞ்சி டிராபியில் பெங்கால் அணி சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்தவர். '
அதன்பின் மகாராஷ்டிரா, விதர்பா உள்ளிட்ட அணிகளுக்கு பயிற்சியாளராக செயல்பட்ட பராஸ் ஆம்ரே, 2020ஆம் ஆண்டு யு19 இந்திய அணிக்கு பவுலிங் பயிற்சியாளராக இருந்து வந்தார். இதன்பின் ராகுல் டிராவிட் மூலம் இந்திய அணியில் இணைந்த அவர், தற்போது ஐபிஎல் தொடரில் மும்பை அணியுடன் இணைந்துள்ளார். இதனால் லசித் மலிங்காவை மும்பை அணி நீக்கியுள்ளதா என்ற சந்தேகமும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.