மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்பு ஒவ்வொரு அணியும் ஐந்து வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று முடிவை பிசிசிஐ எடுக்க உள்ளதாக கிரிக்கெட் வட்டார தகவல் தெரிவிக்கின்றன.
அது மட்டுமல்லாமல் தங்கள் அணியில் ஏற்கனவே விளையாடிய வீரர்களை வேறு அணி மெகா ஏலத்தில் எடுக்கும் போது ஆர் டி எம் கார்டு பயன்படுத்தி மீண்டும் அதே வீரர்களை தங்கள் அணிக்குள் கொண்டு செல்லும் முறையை பிசிசிஐ ரத்து செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் தங்களது அணியில் விளையாட மாட்டேன் என்று வெளியேறும் வீரர்களை ஆர்டிஎம் கார்டு பயன்படுத்தி மீண்டும் ஏலத்தில் எடுத்து விடலாம் என்று நினைத்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. முன்பு நடந்த மெகா ஏலத்தில் நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்தபோது மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மாவுக்கு 16 கோடி ரூபாயும், பும்ராவுக்கு 12 கோடி, சூரிய குமார் யாதவுக்கு 8 கோடி ரூபாயும், கிரண் பொலார்டுக்கு ஆறு கோடி ரூபாயும் வழங்கியது.
தற்போது மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருக்கிறார். அது மட்டுமல்லாமல் பும்ரா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் ஸ்டார் வீரர்களாக இருக்கிறார்கள். இதனால் இவர்களுடைய சம்பளமும் அதிகரிக்க வேண்டும். இந்த சூழலில் ரோகித் சர்மாவுக்கு குறைந்த சம்பளமும் வழங்க முடியாது. இதனால் எந்த வீரரை தக்க வைப்பது? எந்த வீரரை விடுவிப்பது என்ற குழப்பத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இருந்தது.
இதனால் ரோஹித் சர்மாவை விடுவித்து பின்னர் ஏலத்தில் ஆர்டிஎம் கார்டு பயன்படுத்தி மற்ற அணி கொடுக்கும் ஊதியத்தை கொடுத்து விடலாம் என்று மும்பை இந்தியன்ஸ் அணி நினைத்தது.
தற்போது அதற்கு வழி இல்லாமல் போய்விட்டது. ஒருவேளை குறைந்த சம்பளமாக இருந்தாலும் தான் விளையாடுவேன் என்று ரோகித் சர்மா உறுதி அளித்தால் புதிய ரிட்டன்ஷன் விதியை பயன்படுத்தி மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது பலமான அணியை தக்க வைத்துக் கொள்ள முடியும்.
ரோஹித் சர்மா மட்டும் இதற்கு ஓகே சொன்னால் இந்த புதிய விதி மும்பை இந்தியன்ஸ்க்கு சாதகமாக அமையும். 5 வீரர்கள் தக்க வைத்துக் கொள்ளலாம் என்பதால் மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா, பும்ரா, சூரியகுமார் யாதவ், ரோகித் சர்மா மற்றும் இசான் கிஷன் போன்ற வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். ஆனால் எந்த வீரருக்கு எவ்வளவு ஊதியம் தருவது என்பதில் தான் சிக்கலே இருக்கிறது.