மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் குறித்து கடந்த சில மாதங்களாகவே கடும் விமர்சனம் இருந்து வருகிறது. ஆனால், இந்த நிலையில் அவர் 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மூன்று அரை சதங்களை அடித்திருக்கிறார். மேலும், தற்போது மாபெரும் மைல்கல் சாதனை ஒன்றையும் படைத்து பதிலடி கொடுத்துள்ளார். .
சமீபத்தில் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை ஆடியிருந்தார். இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ரியான் ரிக்கல்டனுடன் இணைந்து ரோகித் சர்மா அதிரடியாக விளையாடினார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்தனர். ரியான் ரிக்கல்டன் 38 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார். ரோகித் சர்மா 36 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 9 பவுண்டரிகள் அடித்திருந்தார்.

இந்த அரைசதம் அடித்த போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மட்டுமே ரோகித் சர்மா 6000 ரன்களைச் சேர்த்து மாபெரும் சாதனை படைத்திருக்கிறார். ஐபிஎல் தொடர் துவக்கம் முதலே விளையாடி வரும் ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மட்டுமே 227 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து, 6008 ரன்களைச் சேர்த்துள்ளார்.
2011 முதல் 2025 வரை ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவரது சராசரி 29.89 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 132.01 ஆகவும் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மட்டும் ரோகித் சர்மா 2 சதங்கள் மற்றும் 38 அரை சதங்களை அடித்திருக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோகித் சர்மாவுக்கு அடுத்த அதிகபட்ச ரன்களைச் சேர்த்தது கீரான் பொல்லார்ட். அவர் 3915 ரன்கள் சேர்த்திருக்கிறார். மூன்றாவது இடத்தில் சூர்யகுமார் யாதவ் இருக்கிறார். அவர் 106 இன்னிங்ஸ்களில் 3460 ரன்கள் எடுத்திருக்கிறார். நான்காவது இடத்தில் அம்பத்தி ராயுடு இருக்கிறார். அவர் 127 இன்னிங்ஸ்களில் 2635 ரன்கள் எடுத்திருக்கிறார். ஐந்தாவது இடத்தில் சச்சின் டெண்டுல்கர் இருக்கிறார். அவர் 91 இன்னிங்ஸ்களில் 2599 ரன்கள் எடுத்திருக்கிறார்.
இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மும்பை இந்தியன்ஸ் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது.