மும்பை: ஐபிஎல் வரலாற்றில் அதிக ஊதியம் பெறும் வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பை அணியால் ரீடெய்ன் செய்யப்பட ரோஹித் சர்மா ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படும் சூழலில், ஹர்திக் பாண்டியாவை விடவும் அதிக தொகைக்கு ஒப்பந்தம் கொடுக்க அம்பானி குடும்பம் முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா, மும்பை அணிக்கு டிரேட் செய்யப்பட்டார். அதுமட்டுமல்லாமல் மெகா ஏலத்திற்கு முன்பாகவே ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிய மும்பை அணி நிர்வாகம், புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமனம் செய்து அதிர்ச்சி கொடுத்தது.

இதன்பின் மும்பை அணிக்குள் இரு பிரிவுகள் உருவாகியது. இஷான் கிஷன், இளம் வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் ஹர்திக் பாண்டியா பக்கமும், சீனியர் வீரர்களான சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, பும்ரா உள்ளிட்டோர் ரோஹித் சர்மா பக்கமும் இருந்தனர். இதனால் மும்பை அணியால் வெற்றிகளையும் பெற முடியவில்லை. புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் நிறைவு செய்தது.
இதன் காரணமாக ரோஹித் சர்மா மும்பை அணியில் இருந்து ரிலீஸ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணியின் கேப்டனாக டி20 உலகக்கோப்பையை ரோஹித் சர்மா கைப்பற்றியதால், மும்பை அணி நிர்வாகத்தின் முடிவில் மாற்றம் ஏற்பட்டது. ரோஹித் சர்மாவை தக்க வைக்க மும்பை அணி தீவிரமாக முயற்சித்தது.
அதேபோல் மெகா ஏலத்திலும் ரோஹித் சர்மாவின் மதிப்பு அதிகமாக இருக்கும் என்பதால், அவரின் பிராண்ட் வேல்யூவை விடுவதற்கு மும்பை அணி விரும்பவில்லை. இதன் காரணமாக ரோஹித் சர்மாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தலைமைப் பயிற்சியாளராக ஜெயவர்தனே கொண்டு வரப்பட்டார். அதன்பின் மும்பை அணி தரப்பில் ரீடென்ஷனை பேச்சுவார்த்தையை தொடங்கியது.
அந்த வகையில் மும்பை அணி தரப்பில் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் மற்றும் பும்ரா ஆகிய 4 பேரையும் தக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்பட்டது. இதில் ரோஹித் சர்மாவுக்கு அதிக தொகை கொடுக்க மும்பை அணி நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. அதற்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவின் கீழ் விளையாட ஒப்புக் கொள்ள நிபந்தனை வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன்சி மற்றும் ரூ.15 கோடி ஒப்பந்தம் அளிக்க மும்பை அணி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக பார்க்கப்படுகிறது. ஹர்திக் பாண்டியாவுக்கு ஊதியம் குறைந்தாலும், விளம்பர வருவாய் மூலமாக அதனை ஈடு செய்யவும் மும்பை அணி நிர்வாகம் வாக்களித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ரோஹித் சர்மா ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகை பெறும் வீரராக உயரவுள்ளது குறிப்பிடத்தக்கது.