ஜெய்ப்பூர்: 2025 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய ஒரு போட்டியில், அம்பயர்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சாதகமாகச் செயல்பட்டதாக மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி என்றாலே அம்பயர்கள் அந்த அணிக்குச் சாதகமாகச் செயல்படுவார்கள் என்பது பல ஆண்டுகளாக இருந்து வரும் குற்றச்சாட்டு ஆகும்.
இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ரோகித் சர்மா செய்த டிஆர்எஸ் (DRS - Decision Review System) முடிவுகள் இரண்டு சர்ச்சைகளை கிளப்பி இருந்தன. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ஃபசல்ஹக் ஃபாரூக்கி வீசிய பந்தை ரோகித் சர்மா தவறவிட்டார். அந்த பந்து அவரது காலில் பட்டது. இதை அடுத்து அம்பயர் எல்பிடபிள்யூ (LBW) முறையில் அவுட் கொடுத்தார்.

அதன் பின் ரோகித் சர்மா எதிரில் நின்றிருந்த ரியான் ரிக்கல்டனுடன் டிஆர்எஸ் எடுப்பது பற்றி விவாதித்து, பின்னர் ரிவியூ முடிவை எடுத்தார். ஆனால், டிஆர்எஸ் முடிவை எடுப்பதற்கு 15 வினாடிகள் மட்டுமே இருக்கும் நிலையில், சரியாக நேரம் முடிவடைந்து திரையில் பூஜ்யம் (0) எனக் காட்டப்பட்ட பின்னரே ரோகித் சர்மா ரிவியூ கேட்பதாக அறிவித்தார்.
சரியாக பூஜ்யம் என்ற எண் திரையில் காட்டப்பட்டபோதுதான் ரோகித் சர்மா தனது கையை உயர்த்தத் தொடங்கி இருந்தார். இதனால் ரோகித் சர்மா நேரம் முடிந்த பின்பு ரிவியூ கேட்கவில்லை எனச் சிலரும், அவர் நேரம் முடிந்த பின்னரே ரிவியூ கேட்டார், இது மும்பை இந்தியன்ஸ் அல்லாத வேறு ஒரு அணியாக இருந்திருந்தால், அம்பயர்கள் ரிவியூ வாய்ப்பை மறுத்திருப்பார்கள் எனச் சிலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க, ரிவியூவின் போது மற்றொரு சர்ச்சை எழுந்தது. ரிவியூவில், பந்து ரோகித் சர்மாவின் லெக் ஸ்டம்பிற்கு வெளியே பாதி அளவுக்கு பிட்சானது தெரிந்தது. விதிப்படி, பந்து 50 சதவீதத்திற்கும் அதிகமாக லெக் ஸ்டம்பிற்கு வெளியே பிட்சாகியிருந்தால் அவுட் கொடுக்க முடியாது. அந்தக் காரணத்தைச் சுட்டிக்காட்டி, மூன்றாவது அம்பயர் நாட் அவுட் என அறிவித்தார்.
ஆனால், சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சாதகமாக அம்பயர்கள் செயல்பட்டதாக விமர்சனம் செய்து வருகின்றனர். ரிவியூவில், பந்து 50% கோட்டிற்கு உள்ளேயும் 50% வெளியேயும் பிட்சானதாகவே தெரிந்தது. இது குறித்து முடிவெடுப்பது சிக்கலான ஒன்றுதான் என்றாலும், பொதுவாக அம்பயர்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சாதகமாகச் செயல்படுவதாக ஒரு கருத்து நிலவும் நிலையில், இந்த விவகாரம் அதை மேலும் அதிகரித்தது.
இந்த ரிவியூவில் தப்பிய ரோகித் சர்மா அதன் பின்னர் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார். ரியான் ரிக்கல்டன் 38 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார். சூரியகுமார் யாதவ் 23 பந்துகளில் 48 ரன்களும், ஹர்திக் பாண்டியா 23 பந்துகளில் 48 ரன்களும் சேர்த்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 100 ரன்கள் வித்தியாசத்தில் இமாலயத் தோல்வியைச் சந்தித்தது.