மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டாலும், ரோஹித் சர்மா எடுத்த முடிவுகள்தான் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 45 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலைக்கு சென்றது என ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது ரோஹித் சர்மா இம்பாக்ட் வீரராக வெளியே அமர வைக்கப்பட்டிருந்தார். அவர் இல்லாத 11 வீரர்கள் கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடி வந்தது. இந்த நிலையில் வெளியே சக மாற்று வீரர்களுடன் அமர்ந்திருந்த ரோஹித் சர்மா தலைமை பயிற்சியாளர் மஹிலா ஜெயவர்தனே மற்றும் உதவி பயிற்சியாளர்கள் லசித் மலிங்கா மற்றும் கீரான் பொல்லார்ட் ஆகியோருடன் தொடர்ந்து விவாதித்து வந்தார்.

மேலும் இடைவேளையின்போது உள்ளே செல்லும் வீரர்களிடம் சில அறிவுரைகளையும் வழங்கியபடி இருந்தார். எங்கே ஃபீல்டிங் நிறுத்த வேண்டும் என அவ்வப்போது சைகைகளையும் செய்து வந்தார். அந்த காட்சிகளை எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர் ரோஹித் சர்மாவின் ரசிகர்கள்.
ரோஹித் சர்மாவை வெளியே அமர வைத்தாலும் அவர்தான் கேப்டன் எனவும், அவர் கைகாட்டிய உடன் கொல்கத்தா அணியில் 5 விக்கெட் காலியாகிவிட்டது எனவும் அவர்கள் பெருமிதம் அடைந்து வருகிறார்கள். இது ஒரு புறம் இருக்க, ரோஹித் சர்மா இந்த போட்டியில் 12 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். பேட்டிங்கில் மீண்டும் ஏமாற்றம் அளித்தார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா இதுவரை 21 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். 2025 ஐபிஎல் தொடரில் தனது முதல் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.
அடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 8 ரன்கள் மட்டுமே சேர்த்தார். தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 13 ரன்கள் சேர்த்திருக்கிறார். இதனை அடுத்து ரோஹித் சர்மாவை இம்பேக்ட் வீரராக கூட விளையாட வைக்கக் கூடாது என ஒரு தரப்பு ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
தோனி கூட சிஎஸ்கே அணிக்காக 43 வயதில் ரன் குவிக்கிறார் ஆனால், ரோஹித் சர்மா படுமோசமாக விளையாடி வருகிறார் எனவும் விமர்சனங்களை முன் வைத்து உள்ளனர்.