லக்னோ: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் விளையாடி வந்த போது பந்துவீச்சில் முதல் பாதியில் திணறியது. அப்போது திட்டமிடலுக்கான ஐந்து நிமிட இடைவேளையின் போது மும்பை அணியின் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டிருந்த ரோஹித் சர்மா களத்துக்கு வந்தார்.
அவர் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு சில அறிவுரைகளை வழங்கினார். அதற்கு அடுத்த ஓவரிலேயே மிகவும் ஆபத்தான அதிரடி பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அப்போது ஹர்திக் பாண்டியாவிடம் ஸ்லோ பால் வீசுமாறு ரோஹித் கூறினார்.

ரோஹித் சொன்ன அந்த அறிவுரை நேரலையில் லேசான சத்தத்துடன் கேட்டது. அந்த வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர் ரோஹித் ரசிகர்கள். அதைப்போலவே ஹர்திக் பாண்டியா தான் வீசிய பல பந்துகளை மிதமான வேகத்தில் வீசினார். இந்த போட்டியில் அவர் ஐந்து விக்கெட் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
நிக்கோலஸ் பூரன் களத்தில் இருந்திருந்தால் நிச்சயமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மேலும் 20 அல்லது 30 ரன்களை சேர்த்திருக்கும். இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா முதன்முறையாக 5 விக்கெட் வீழ்த்தி ஐபிஎல் கேப்டன் என்ற சாதனையும் செய்தார். அதன் பின்னணியிலும் ரோஹித் சர்மா தான் இருக்கிறார் என ரசிகர்கள் இந்த வீடியோவை வெளியிட்டு சமூக வலைதளங்களில் மார்தட்டி வருகிறார்கள்.
மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டு இருந்தாலும் ரோஹித் சர்மா அணிக்காக வேலை செய்கிறார் என்றும், ஹர்திக் பாண்டியா தொடர்ந்து தவறான கேப்டன்சி முடிவுகளை எடுத்து வரும் நிலையில் அதை மாற்றுவதற்கு ரோஹித் சர்மா வெளியில் இருந்து கொண்டு போராடி வருவதாகவும் ரோஹித்தின் ரசிகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
இதற்கு முன்பு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ரோஹித் சர்மா இம்பேக்ட் வீரராக வெளியே அமர்ந்திருக்கும் போது ஃபீல்டிங்கில் மாற்றங்களை சொல்லிக் கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதும் இதே போல ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த போட்டியில் முதல் 45 ரன்கள் எடுப்பதற்குள் கொல்கத்தா அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்தது.
அப்போதும் ரோஹித் சர்மாவின் முடிவுகள் தான் அதற்குக் காரணம் என அவரது ரசிகர்கள் சொல்லி வந்தனர். தற்போது மீண்டும் ஹர்திக் பாண்டியாவுக்கு அவர் அறிவுரை சொல்லும் வீடியோ வெளியாகி அதே போன்ற பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனினும், இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கில் சொதப்பியது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 203 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.