மும்பை: ஐபிஎல் தொடரில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இம்பேக்ட் பிளேயர் விதிமுறைக்கு பெரும்பாலான அணிகளின் கேப்டன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், 2027 ஆம் ஆண்டு சீசனுக்குப் பிறகுதான் இந்த விதிமுறை குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என பிசிசிஐ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மும்பையில் புதன்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கேப்டன்கள் ஆலோசனைக் கூட்டத்தில் 10 அணிகளின் கேப்டன்களும் பங்கேற்று பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் இல்லாததால், அவருக்குப் பதிலாக இஷான் கிஷன் இதில் பங்கேற்றார். இதனால் 10 அணிகளின் சார்பிலும் இந்திய வீரர்களே இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்தில், பெரும்பாலான கேப்டன்கள் இம்பேக்ட் பிளேயர் விதிமுறை குறித்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இந்த விதியால் கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர்களின் தேவை மற்றும் முக்கியத்துவம் முற்றிலும் குறைந்துவிட்டதாக ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் மற்றும் வெளிநாட்டு வீரரான கிளென் பிலிப்ஸ் ஆகியோர் ஏற்கனவே பொதுவெளியில் விமர்சித்திருந்த நிலையில், இந்த கூட்டத்திலும் இது முக்கிய விவாதமாக மாறியது. ஆனால் கேப்டன்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த பிசிசிஐ அதிகாரிகள், இந்த விதிமுறை 2027 ஆம் ஆண்டு வரை அதிகாரப்பூர்வமாக நீட்டிக்கப்பட்டுள்ளதால், அதற்கு முன்பு இதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்றும், 2027 சீசனுக்குப் பிறகே இது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் உறுதியாகத் தெரிவித்துவிட்டனர்.
இதற்கிடையே, இரவு நேரப் போட்டிகளில் பனிப்பொழிவை சமாளிக்க 2வது இன்னிங்ஸில் 10 ஓவர்களுக்குப் பிறகு பந்தை மாற்றிக்கொள்ளும் விதிமுறை தற்போது நடைமுறையில் உள்ளது. இதேபோல முதல் இன்னிங்ஸிலும் 10 ஓவர்களுக்குப் பிறகு பந்தை மாற்ற அனுமதிக்க வேண்டும் என ஒரு கேப்டன் கோரிக்கை விடுத்தார். ஆனால், 2வது இன்னிங்ஸில்தான் பனிப்பொழிவு அதிகம் இருக்கும் என்பதால் தற்போதைய விதிமுறையே தொடரும் என அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

மேலும், புதிய பயிற்சி விதிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. போட்டிகள் நடைபெறும் நாட்களில் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ளக் கூடாது என்றும், ஒரு அணி தனது பயிற்சியை முன்கூட்டியே முடித்துக்கொண்டாலும், அந்த ஆடுகளத்தை மற்றொரு அணி தங்களது பயிற்சிக்காக பயன்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் குறித்தும் கேப்டன்களுக்கு இந்த கூட்டத்தில் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.
