IPL 2026: "ஒட்டுமொத்தமாக தோற்கடித்து விட்டார்கள்.. பேசவே ஒன்னும் இல்லை".. ஹர்திக் பாண்டியா வேதனை
மும்பை: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் மும்பை இந்தியன்ஸ் அணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். போட்டிக்குப் பிந்தைய பேட்டியின் போது மிகுந்த விரக்தியுடன் காணப்பட்ட அவர், சக வீரர்களின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி குயின்டன் டி காக்கின் அதிரடி சதத்தின் (112 ரன்கள்) உதவியுடன் 195 ரன்கள் குவித்தது. ஆனால், இந்த இலக்கை பஞ்சாப் அணி வீரர்கள் ஈவு இரக்கமின்றி துவம்சம் செய்தனர். வெறும் 16.3 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 198 ரன்கள் எடுத்து பஞ்சாப் அபார வெற்றி பெற்றது.

தோல்விக்குப் பின் ஆவேசம்:
சொந்த மண்ணில் சந்தித்த இந்த அவமானகரமான தோல்விக்குப் பிறகு பேசிய ஹர்திக் பாண்டியா, "உண்மையைச் சொல்லப்போனால், தற்போது பேசுவதற்கு என்னிடம் ஒன்றுமில்லை. எங்கே தவறு நடக்கிறது என்பதை நாங்கள் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து ஆராய வேண்டும். தனிப்பட்ட வீரர்களிடம் குறை உள்ளதா? அல்லது ஒரு குழுவாகச் செயல்படுவதில் சிக்கலா? அல்லது எங்களது திட்டமிடல் தவறா? என்பதை அமர்ந்து பேச வேண்டும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என மூன்று துறைகளிலும் பஞ்சாப் அணி எங்களை விடச் சிறப்பாகச் செயல்பட்டது. அவர்கள் எங்களை ஒட்டுமொத்தமாகத் தோற்கடித்துவிட்டார்கள். அவர்கள் ஆடிய விதம் எங்களிடம் வெற்றி வாய்ப்பைப் பறித்துவிட்டது" எனத் தெரிவித்தார்.
கடினமான முடிவுகள்:
மும்பை இந்தியன்ஸ் அணி இந்தச் சீசனில் இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 4-ல் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. அணியில் மாற்றம் தேவையா என்ற கேள்விக்கு, "தற்போதுள்ள வீரர்களை வைத்துக்கொண்டே நிலைமையைச் சீர் செய்யலாமா அல்லது அதிரடியாகச் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டுமா என்பது குறித்து நான் ஆலோசித்து வருகிறேன். சில கடினமான கேள்விகளுக்கு நாங்கள் விடை காண வேண்டியுள்ளது. தோல்விக்குப் பொறுப்பேற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்" என ஹர்திக் பாண்டியா பதிலளித்தார்.
பஞ்சாப் கிங்ஸ் அணி 5 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆனால், மும்பை அணி கொல்கத்தாவுக்கு எதிரான ஒரு வெற்றியைத் தவிர மற்ற அனைத்துப் போட்டிகளிலும் ஒருதலைப்பட்சமாகத் தோல்வியடைந்துள்ளது. ஹர்திக் பாண்டியாவின் தலைமை மற்றும் அணியின் செயல்பாடு மும்பை ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications