IPL 2026: ஹர்திக் பாண்டியா மீது பழிபோட்டு தப்பிக்க முடியாது.. பும்ரா, சூர்யகுமாரை விளாசிய பிஷப்
மும்பை: ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நடப்பு சீசனில் என்னதான் ஆனது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பெரிதாக எழுந்துள்ளது. அடுத்தடுத்த மோசமான தோல்விகளால் அந்த அணியின் பிளே ஆப் வாய்ப்பு பெரும் கேள்விக்குறியாகி வரும் நிலையில், கேப்டன் ஹர்திக் பாண்டியா மீது மட்டுமே மொத்த பழியையும் போடுவது எந்த வகையிலும் சரியல்ல என்றும், சூர்யகுமார் யாதவ், பும்ரா போன்ற நட்சத்திர வீரர்களும் இந்த சறுக்கலுக்கு முழு பொறுப்பேற்க வேண்டும் என முன்னாள் வீரரும், பிரபல வர்ணனையாளருமான இயன் பிஷப் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 6ல் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் மிகவும் பின்தங்கியுள்ளது. குறிப்பாக ஹைதராபாத் அணிக்கு எதிரான கடந்த லீக் போட்டியில் 244 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை நிர்ணயித்தும், அதை பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்த முடியாமல் மும்பை அணி தோல்வியை தழுவியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் கேப்டன் ஹர்திக் பாண்டியா இதுவரை சோபிக்காததால் அவரது கேப்டன்சி மீது பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனங்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன. தனது மோசமான ஃபார்ம் குறித்து பாண்டியாவும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இயன் பிஷப் மும்பை அணியின் தற்போதைய நிலை குறித்து தனது கருத்தை ஆழமாக பகிர்ந்துள்ளார். ஒரு அணியின் தொடர் தோல்விக்கு கேப்டனை மட்டுமே குறைகூற முடியாது. வியூக ரீதியாக கேப்டன் சில அதிரடி முடிவுகளை மாற்றலாம் என்றாலும், அணியில் உள்ள மற்ற நட்சத்திர வீரர்களும் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தி சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே மைதானத்தில் வெற்றி சாத்தியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவரது இந்த கருத்து மும்பை அணியின் முக்கிய வீரர்களாக கருதப்படும் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ராவை குறிப்பதாகவே உள்ளது. நடப்பு சீசனில் சூர்யகுமார் 8 போட்டிகளில் களமிறங்கி 20 என்ற சராசரியில் வெறும் 162 ரன்கள் மட்டுமே எடுத்து மிகவும் திணறி வருகிறார். அதேபோல் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா 8 போட்டிகளில் விளையாடி வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி தனது மிக மோசமான ஐபிஎல் சீசனை சந்தித்து வருகிறார்.
சொந்த மண்ணில் சமீபத்தில் நடந்து முடிந்த 2026 டி20 உலகக்கோப்பையை வெல்ல பும்ரா மற்றும் சூர்யகுமார் ஆகியோர் தங்களது முழு சக்தியையும் வெளிப்படுத்தியதால், அவர்கள் உடல் ரீதியாக அதிக சோர்வடைந்துள்ளதாக பிஷப் சுட்டிக்காட்டி உள்ளார். முக்கியமாக பும்ரா போன்ற வீரர்களுக்கு போதிய ஓய்வு அளித்து, அவர்களது திறமைகளை மீண்டும் புதுப்பித்து களமிறக்க வேண்டும் என அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். தற்போது நெருக்கடியான நிலையில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, இனி வரும் 6 போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications