IPL 2026: மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மாவுக்கு புதிய பொறுப்பு.. தவறை திருத்திய MI நிர்வாகம்
மும்பை: ஐபிஎல் 2026 சீசனில் ரோஹித் ஷர்மாவை களத்தில் அதிகம் காண விரும்புவதாக மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் மஹேல ஜெயவர்த்தனே, தெரிவித்தார். 2025 ஐபிஎல் தொடரில் அவர் 'இம்பேக்ட் பிளேயர்' விதியின் கீழ் பயன்படுத்தப்பட்டது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது.
2025 ஆம் ஆண்டில், ரோஹித் ஷர்மா பெரும்பாலும் மாற்று வீரராகவே களமிறங்கி, சிறப்பு பேட்ஸ்மேனாக செயல்பட்டார். களத்தில் அதிகம் நிற்கவில்லை. இதன் காரணமாக, ஹர்திக் கேப்டனாக பல தவறுகளை செய்தார். அதனை திருத்த ரோகித் சர்மா களத்தில் இல்லாத நிலை ஏற்பட்டது. இது குறித்து கேள்வி எழுப்பிய ஆகாஷ் சோப்ரா, முழு உடற்தகுதியுடன் இருக்கும் வீரர் முழு போட்டியிலும் விளையாட வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த விமர்சனங்களுக்கு ஜெயவர்த்தனே பதிலளித்தார்: "கடந்த ஆண்டு ரோஹித்தை நிர்வகித்தோம். அவருக்கு சில சிறிய உபாதைகள் இருந்ததால், கவனமாக இருக்க வேண்டியிருந்தது. அவர் களத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அணியில் தொடர்ந்து மிகப்பெரிய தாக்கத்தை செலுத்திக் கொண்டிருக்கிறார்," என விளக்கினார்.
"நிச்சயமாக இந்த ஆண்டு, நான் முடிந்தவரை அவரை களத்தில் அதிக நேரம் வைத்திருக்கவே விரும்புகிறேன். ஆனால், பந்துவீச்சாளர்களை சுழற்றுவதிலோ அல்லது இம்பேக்ட் பிளேயர் எந்த நேரத்தில் களத்திற்கு வருகிறார் என்பதிலோ, அனைத்து வீரர்களும் களத்தில் இருக்க வேண்டுமா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்," என்றார்.
முன்னாள் இலங்கை வீரரான ஜெயவர்த்தனே, கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு கூடுதல் பந்துவீச்சு வாய்ப்புகளை வழங்க, ரோஹித்தை சில சமயங்களில் களத்திற்கு வெளியே வைத்திருக்கக்கூடும் என்பதை மறைமுகமாகத் தெரிவித்தார். "எங்கள் அணியில் பெரும்பாலானோர் ஆல்-ரவுண்டர்களே; அவர்களும் நன்கு பந்து வீசுவார்கள்," என அவர் குறிப்பிட்டார்.
"தற்போது எங்கள் அணியில் ஆல்-ரவுண்டர்களாக இல்லாதவர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் மட்டுமே. எதிரணிக்கு ஏற்ப கேப்டனுக்கு பந்துவீச்சு வாய்ப்பு தேவைப்பட்டால், அதை நாங்கள் நிச்சயம் விவாதிக்க வேண்டும்," என்றார் ஜெயவர்த்தனே. மேலும், "இந்த விசயத்தில் முடிவெடுக்க நீங்கள் எனக்கு உதவ முடியுமா?" என்று செய்தியாளர்களிடம் நகைச்சுவையாக கேட்டார்.


Click it and Unblock the Notifications