
கொல்கத்தா: இந்த வருட ஐபிஎல் தொடரில் 'பிசினஸ் எண்ட்' என்று கூறப்படும் இறுதி கட்டத்தை அனைத்து அணிகளும் எட்டிவிட்டன.
நேற்றிரவு நடைப்பெற்ற போட்டியோடு 8 அணிகளும் தலா பத்து போட்டிகளில் விளையாடிவிட்டன. இதில் தற்போது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் 16,14 புள்ளிகளைப் பெற்று அடுத்த சுற்றுக்குத் தங்களை தயார் படுத்தி வருகிறது.

இவர்களை அடுத்த மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு வழக்கம்போல நான்கு அணிகள் கயிற்றின் மேல் நடப்ப்பதைப்போல ஒவ்வொரு போட்டியையும் வாழ்வா சாவா என்பதைப்போல எதிர்க்கொண்டு வருகிறார்கள். அதில் மிக முக்கியமான ஆட்டம் இன்று நடைபெறவிருக்கும் கொல்கத்தா v மும்பை பட்டாசாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதுவரை நடைபெற்ற 10 ஆட்டங்களில் 10 புள்ளிகளைப் பெற்று ஓரளவிற்கு தெம்பாக இருந்தாலும், இன்றைய போட்டியில் வென்றேத் தீரவேண்டிய கட்டாயத்தில் தினேஷ் கார்த்திக்கின் அணி ரோஹித் ஷர்மாவின் மும்பையை தங்களுடைய ஹோம் கிரவுண்டில் சந்திக்கிறது. இரு தினங்களுக்கு முன் மும்பையில் நடைபெற்ற போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையிடம் இரண்டு புள்ளிகளை இழந்ததற்கு பதிலடியாக கொல்கத்தாவின் ரசிகர் பட்டாளத்தின் துணைக்கொண்டு மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புவார்கள் என நம்பலாம்.
அதே நேரத்தில், மும்பை அணியில் பாண்டியா சகோதரர்கள், பும்ரா மூவரும் இப்போதுதான் அதிரடியாக ஆட ஆரம்பித்திருக்கிறார்கள். ஆக இம்மூவரும், ரோஹித் ஷர்மா, பென் கட்டிங், சூர்ய குமார் யாதவ் போன்றவர்களின் துணையோடு அடித்து நொறுக்கினால், மும்பை மீண்டும் தொடர் வெற்றிகளைக் குவித்து பிளே ஆஃப் சென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
மும்பையைப்போன்று கொல்கத்தாவிற்கு பெரிதாக பிரச்சனைகள் ஏதுமில்லை. ஆனால் தங்களின் தோல்விகளை தாங்களே தேடிக்கொள்கிறார்களோ என்ற விதத்தில் சில முடிவுகளை எடுக்கிறார்கள். சென்ற ஆட்டத்தில் அதுவரை துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்ட சுனில் நரேனை பின் வரிசையில் இறக்கியது முதல் ஷுப்மன் கில் போன்றவர்களின் திறமையை நன்றாக உபயோகப்படுத்தாமல் வீணடிப்பது என இதுவரை செய்த தவறுகளை உடனே திருத்திக்கொண்டால் நல்லது.
மும்பை அணியின் வெற்றிக்கும் உதவக்கூடியவர்கள்:
ரோஹித் ஷர்மா
பென் கட்டிங்
ஹார்திக் பாண்டியா
க்ருனால் பாண்டியா
பும்ரா
கொல்கத்தாவின் அதிரடி வீரர்கள்:
சுனில் நரேன்
தினேஷ் கார்த்திக்
க்றிஸ் லின்
ஆண்ட்ரே ரஸ்ஸல்
கில்
எப்போதும் வார இறுதியில் நடக்கும் போட்டிகளை எதிர்நோக்கி இருக்கும் ஐபிஎல் ரசிகர்கள் இன்று நடைபெறும் போட்டிக்கு அதீத ஆவலோடு இருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.