மும்பை : ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி எடுத்த முக்கிய முடிவு போட்டியில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கேப்டன் தோனி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அப்போது சிஎஸ்கே அணியின் பந்துவீச்சை மும்பை அணியின் தொடக்க வீரர்கள் ரோகித் மற்றும் இஷான் கிஷனை அடித்து நொறுக்கினார்கள். இந்த ஜோடியை கட்டுப்படுத்த முடியாமல் சிஎஸ்கே வீரர்கள் தடுமாறினர் அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 13 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்தார்.

அப்போது துஷார் தேஷ்பாண்டே வீசிய பந்த ஒன்று ரோகித்தின் ஸ்டம்பை பதம் பார்த்தது. எனினும் அதன் பிறகு இஷான் கிஷன் அதிரடியை காட்டினார். பவர்பிளேவில் மும்பை அணி 6 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து இஷான் கிஷன் அதிரடியாக ஆட முற்பட்டு, பவுண்டரி லைனில் கேட்ச் ஆனார்.
இந்த நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் , சாண்ட்னர் பந்துவீச்சை ஸ்விப் செய்த போது , அது அவருடைய கையில் பட்டு, தோனி கேட்ச் பிடித்தார். ஆனால், நடுவர் அதற்கு அவுட் கொடுக்கவில்லை. இதனையடுத்து, தோனி ரிவியூ கேட்டார். அதில் ரீப்ளேவில் சூர்யகுமாரின் கையில் பந்து பட்டது தெரியவந்தது. இதனையடுத்து ரசிகர்கள் தோனியை கொண்டாடி வருகின்றனர்.