அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் - சென்னை அணிகள் மோதவுள்ள நிலையில், திடீரென மழை பெய்து வருவதால் ரசிகர்கள் கவலையடைந்து உள்ளனர்.
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 31ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியது. 2 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்ற லீக் போட்டிகளுக்கு பின், பிளே ஆப் சுற்றுக்கு குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை அணிகள் முன்னேறின. இதில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் தோல்வியடைந்த வெளியேற, இறுதிப்போட்டியில் குஜராத் - சென்னை அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டிக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஐபிஎல் இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்து விற்றுத் தீர்ந்தன. இதையடுத்து ஆட்டம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக ரசிகர்கள் மைதானத்தில் குவிய தொடங்கினர். பெரும்பாலான ரசிகர்கள் மஞ்சள் ஜெர்சியுடன் கலந்துகொண்டுள்ளனர். இதனால் சென்னை அணிக்கான ஆதரவு அதிகளவில் இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் திடீரென மழை பெய்து வருகிறது.
இதனால் ரசிகர்கள் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் மழை தொடர்ந்து நீடித்தாலும் இரவு 10.10 மணி வரை ஓவர்கள் குறைக்கப்படாமல் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒருவேளை மழை நிற்கவில்லை என்றால், ஆட்டம் நாளைக்கு மாற்றப்படும். நாளையும் மழை தொடர்ந்து பெய்தால் மட்டுமே, கோப்பை இரு அணிகளுக்கு சமமாக பிரித்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
அதேபோல் அகமதாபாத்தில் மழை பெய்து வருவதால், டாஸ் வெல்லும் அணிக்கே சாதகமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை அணி டாஸ் வென்றால் பந்துவீச்சை தேர்வு செய்ய வேண்டும் என்றும், இரண்டாம் பாதி ஆட்டத்தில் நிச்சயம் பனிப்பொழிவு இருக்கும் என்றும் பார்க்கப்படுகிறது. இதனால் எந்த அணி டாஸ் வெல்கிறதோ, அந்த அணி வெற்றிபெறவே அதிக வாய்ப்புகள் உள்ளது. '