மிடில் ஆர்டர்
இதுகுறித்து மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் ஷர்மா, செய்தியாளர்களிடம் கூறியதாவது: முக்கிய வீரர்கள் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடவில்லை என்று நினைத்து நான் கவலைப்படவில்லை. ஓப்பனிங்கில் பேட்ஸ்மேன்கள் கைவிட்டபோதும், மிடில் ஆர்டர் வீரர்கள் தாங்கள் முன்வந்து ஆட ஆரம்பித்தனர்.
ஒற்றுமையான ஆட்டம்
தனிப்பட்ட நபர்கள் ஆட்டம் சில போட்டிகளில் வெற்றிக்கு உதவலாம். ஆனால் அணியின் ஒற்றுமையான ஆட்டம்தான் தொடர்ச்சியான வெற்றிக்கு வழி வகுக்கும்.
பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம்
இதற்கு முன்பு 2 ஐபிஎல் தொடர்களை நாங்கள் வென்றபோது, டாப் 5 பேட்ஸ்மேன்களில் ஒருவராவது அதிக ரன் குவித்தவர்களாக இருந்தனர். இம்முறை அப்படி பேட்ஸ்மேன் கிடைக்கவில்லை. ஆனால் ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு போட்டியில் சிறப்பாக பங்களித்ததால் அணியால் வெற்றிபெற முடிந்தது. இவ்வருட அணியின் ஸ்பெஷாலிட்டி இதுதான்.
சிறப்பான அணி
எப்போதுமே ஒரே நபரை வெற்றிக்காக நம்பியதில்லை. ஆனால் இன்று ஒரு சிறந்த உதாரணம் நிகழ்ந்துள்ளது. பந்து வீச்சு யூனிட் சிறப்பாக இணைந்து செயல்பட்டது. சில இளம் வீரர்கள், சில ஜாம்பவான்கள் ஆகியோரை கொண்டு இணைந்த இந்த அணி சிறப்பாக செயல்பட்டது. இவ்விரு துருவங்களும் இணைந்து ஆடியது சிறப்பு.
பாண்டியர்கள்
பாண்டியா சகோதரர்கள் தங்கள் பங்களிப்பை கொடுப்பதில் ஆர்வம் காட்டினர். ஃபீல்டிங், பவுலிங், பேட்டிங் என ஏதாவது ஒன்றில் தங்களது பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் கவனமாக இருந்தனர்.
பெவிலியனில் ஆலோசனை
160 ரன்கள் என்பது ஹைதராபாத் மைதானத்தில் போட்டியை வெல்ல தகுந்த ஸ்கோராக இருந்திருக்கும். ஆனால், 130 ரன்கள்தான் எங்களால் எடுக்க முடிந்தது. பேட்டிங் முடிந்து வீரர்கள் பெவிலியனில் (ஓய்வறையில்) இருந்தபோது, இந்த ஸ்கோரையும் நாம் நினைத்தால் காப்பாற்ற முடியும் என பேசிக்கொண்டோம்.
கொல்கத்தா நல்ல அணி
குவாலிபையர்-2வது போட்டியின்போது, கொல்கத்தா அணியை 107 ரன்களுக்கு சுருட்டினோம். நடப்பு ஐபிஎல் தொடரில் சிறந்த பேட்டிங் லைன் கொண்ட ஒரு அணியான கொல்கத்தாவையே அவ்வளவு குறைந்த ரன்னில் மடக்கியபோது, ஏன் இப்போது முடியாது என கேள்வி எழுப்பினோம். அதை பவுலர்கள் செய்து காட்டிவிட்டனர். இந்த உத்வேகம்தான் வெற்றிக்கு காரணம்.
ஃபீல்டிங்கிலும் தேறினோம்
புனே பேட்டிங் ஆரம்பித்தபோது ஃபீல்டிங்கில் சில தவறுகளை செய்தோம். எனவே பிரேக் நேரத்தில் அணி வீரர்கள் ஒன்று கூடி, பதற்றமில்லாமல் ஆட வேண்டியதன் அவசியம் குறித்து பேசிக்கொண்டோம். இதன்பிறகு சிறப்பாக செயல்பட்டோம். இவ்வாறு ரோகித் ஷர்மா தெரிவித்தார்.