மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரின் பைனல்ஸில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன.
ஏப்ரல் மாதம் 7ம் தேதி துவங்கிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரில், 49 நாட்களில் 59 ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. பைனல்ஸ் இன்று இரவு 7 மணிக்கு மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
லீக் சுற்று ஆட்டங்களில் புள்ளிப் பட்டியலில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் முதலிடத்தைப் பிடித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. கொல்கத்தா மூன்றாவது இடத்தையும், ராஜஸ்தான் நான்காவது இடத்தையும் பிடித்தன.
முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வென்று நேரடியாக பைனல்ஸ் நுழைந்தது.
அடுத்து நடந்த எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை கொல்கத்தா வென்றது. நேற்று இரவு நடந்த இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டத்தில் கொல்கத்தாவை 13 ரன்களில் அபாரமாக வென்றது ஹைதராபாத்.
இந்த சீசனில் சிஎஸ்கே மற்றும் ஹைதராபாத் அணிகள் மூன்று முறை மோதியுள்ளன. லீக் சுற்றில் இரண்டு முறையும், முதல் தகுதிச் சுற்று ஆட்டத்திலும் விளையாடின. இந்த மூன்றிலும் சிஎஸ்கே வென்றது.
இன்று நடக்கும் பைனல்ஸில் இரு அணிகளும் இந்த சீசனில் நான்காவது முறையாக சந்திக்க உள்ளன. மூன்றாவது முறையாக கோப்பையை வெல்ல சிஎஸ்கேவும், இரண்டாவது முறையாக வெல்ல ஹைதராபாத்தும் மோத உள்ளன. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவியில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பாகிறது.