டெல்லி : ஐபிஎல் 2023ஆம் ஆண்டு தொடர் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாத போட்டிகள் நிறைந்ததாக உள்ளது. டெல்லி அணியும், மும்பை அணியிம் மோதிய இன்றைய ஆட்டமும் ரசிகர்களின் BP யை எகிற வைத்திருக்கும்.
டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்ல அணியில் தொடக்க வீரர் பிரித்வி ஷா 10 பந்தில் 15 ரன்கள் எடுத்தார்.ஒரு முனையில் டேவிட் வார்னர் , கேஎல் ராகுலின் ஜெராக்ஸ் போல் மெதுவாக விளையாடினார். இதனால் எதிர்முனையில் நின்ற பேட்ஸ்மேனுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. மணிஷ் பாண்டே 26 ரன்களும் யாஷ் துல் 2 ரன்களிலும் வெளியேறினர்.

அதிரடியாக ஆடக் கூடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் போவெல் 4 ரன்களிலும், லலித் 2 ரன்களிலும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப, டேவிட் வார்னர் மட்டும் ஆமை வேகத்தில் 43 பந்துகளில் அரைசதம் கடந்தார். பரிதாபமான நிலையில் இருந்த டெல்லி அணியை ஆல்ரவுண்டராக உதயமாகி வரும் அக்சர் பட்டேல், மும்பை பந்துவீச்சை பறக்கவிட்டார். .5 சிக்சர், 4பவுண்டரிகளை விளாசிய அக்சர் பட்டேல் 22 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
அக்சர் பட்டேல் 54 ரன்களில் பெகுரண்டர்ப் பந்துவீச்சில் வெளியேற, டெல்லி அணிக்கு மீண்டும் சரிவு தொடங்கியது. அந்த ஓவரில் மட்டும் 4 விக்கெட்டுகள் விழுந்தன. இதனால் 165 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற நிலையில் இருந்த டெல்லி அணி கடைசி 7 ரன்கள் எடுப்பதற்குள் மேலும் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களில் சுருண்டது.
இதனையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் ரோகித் சர்மா, தனது பழைய அதிரடியை வெளிப்படுத்தினார். குறிப்பாக 95 மீட்டர் தூரத்தில் சிக்சர் அடித்து ரசிகர்களை பரவசப்படுத்தினார். மற்றொரு தொடக்க வீரரான இஷான் கிஷன் 31 ரன்களில் வெளியேற, இளம் வீரர் திலக் வர்மா 29 பந்தில் 41 ரன்கள் சேர்த்தார். அதுவரை மும்பை அணியின் வெற்றி எளிதாக இருந்தது. ஆனால், அப்போது தான் ஒரு டிவிஸ்ட் ஏற்பட்டது. முகேஷ் குமார் வீசிய 16வது ஓவரில் திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.
கேப்டன் ரோகித் சர்மாவும் ஐபிஎல் தொடரில் 2 ஆண்டுகளுக்கு பிறகு அரைசதம் அடித்த நிலையில், டெல்லி விக்கெட் கீப்பர் அபிஷேக்கின் அபார கேட்சால் பெவிலியன் திரும்பினார். மும்பை அணி அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்ததால், அந்த அணி கடுமையாக தடுமாறியது. கடைசி 2 ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் , டிம் டேவிட் மற்றும் கேமிரான் கிரீன ஆகியோர் முஸ்தபிசுர் ஓவரில் தலா ஒரு சிக்சர் அடித்தனர். இது ஆட்டத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து கடைசி ஓவரில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது நோக்கியா யாரும் எதிர்பார்க்காத வகையில் தொடர்ந்து யாக்கர்களை வீசி மும்பைக்கு கடும் நெருக்கடி கொடுத்தார் அப்போது டிம் டேவிட் அடித்த பந்தை முகேஷ் குமார் கவரில் கேட்ச் மிஸ் செய்தார். இதனையடுத்து கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட, டிம் டேவிட் தனது வாழ்க்கையை பனையமாக வைத்து ஓடுவது போல் ஓடி ஒரு டைவ் அடித்து 2 ரன்களை நிறைவு செய்தார். இதனால் மும்பை அணி தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது.