மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளர் பதவியில் இருந்து விடை பெற்றார் ஷேன் பான்ட்.
சுமார் 9 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பயணித்த ஷேன் பான்ட், தற்போது விலகி இருக்கிறார்.
அவராகவே விலகினாரா? அல்லது மும்பை இந்தியன்ஸ் உரிமையாளரான அம்பானி குடும்பத்தினர் முடிவால் விலகினாரா? என்பதில் சந்தேகங்கள் உள்ளன.

நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளரான ஷேன் பான்ட் ஐபிஎல் தொடரில் துவக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் தான் ஆடினார்.
பின்னர் 2015இல் மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவரது காலத்தில் தான் மும்பை இந்தியன்ஸ் அதிக முறை ஐபிஎல் கோப்பை வென்றது. 2015, 2017, 2019 மற்றும் 2020 என் நான்கு ஐபிஎல் கோப்பை வெற்றிகளில் பவுலிங் பயிற்சியாளராக ஷேன் பான்டின் பங்கு மிகவும் அதிகம்.
இதே காலகட்டத்தில் இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் லசித் மலிங்கா அவ்வப்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆலோசகராக இடம் பெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது. ஷேன் பான்ட், மலிங்கா இருவரும் சேர்ந்தே பணியாற்றினார்கள்.
ஆனால், மலிங்கா தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெறவில்லை. மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஐஎல்டி20 தொடர் அணியான எம்ஐ எமிரேட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஷேன் பான்ட் கடந்த ஆண்டு செயல்பட்டார்.
லசித் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக கடந்த ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார். அப்போதே ஷேன் பான்ட் நிலை என்ன? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், தற்போது ஷேன் பான்ட் பதவி விலகி இருக்கிறார்.
தனது விலகல் குறித்து பதிவிட்டுள்ள ஷேன் பான்ட், "கடந்த ஒன்பது சீசன்களாக "மும்பை இந்தியன்ஸ் ஒன்" குடும்பத்தில் அங்கம் வகிக்கும் வாய்ப்பு கிடைத்ததற்காக அம்பானி குடும்பத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பல சிறந்த நினைவுகளுடன், இது ஒரு நம்பமுடியாத அனுபவமாக இருந்தது. வீரர்கள் மற்றும் பணியாளர்கள் என பல சிறந்த மனிதர்களுடன் பணியாற்றுவதற்கும் வலுவான உறவுகளை வளர்த்துக் கொண்டதும் என் அதிர்ஷ்டம். அவர்கள் அனைவரையும் நான் இழக்கிறேன். எதிர்காலத்தில் அவர்கள் சிறப்பாக செயல்பட அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் பால்தானுக்கு அவர்களின் ஆதரவுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்" என கூறி இருக்கிறார்.