மும்பை : ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக 5 கோப்பையை கைப்பற்றிய அணி என்றால் அது மும்பை இந்தியன்ஸ் அணிதான். ரோகித் சர்மா தலைமையில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு முறை கூட சாம்பியன் பட்டத்தை கைப்பற்றவில்லை.
மேலும் இந்த நான்கு ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு முறை பத்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக களம் இறங்கிய ஹர்திக் பாண்டியா, அணியின் மறுமலர்ச்சிக்கு உதவி செய்வார் என எதிர்பார்த்தால் அவருக்கு ரசிகர்களின் ஆதரவும் வீரர்களின் ஆதரவும் கிடைக்கவில்லை.

இதனால் மும்பை அணி நடந்து முடிந்த ஐபிஎல் சீசனின் பத்தாவது இடத்தையே பிடித்தது. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி சொதப்பி வருகிறது என்பது குறித்து அந்த அணியில் இடம் பெற்று இருந்த கிரிக்கெட் வீரர் சாவ்லா கருத்து தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர் நாங்கள் செய்தது பல விஷயம் தவறாக போய் முடிந்துவிட்டது என்று நான் சொல்லவே மாட்டேன்.
டி20 கிரிக்கெட் என்பது உத்வேகத்தை அடிப்படையாகக் கொண்டது. எங்களுக்கு அந்த உத்வேகம் கடந்த சீசனில் கிடைக்கவே இல்லை. கொல்கத்தா அணிக்கு அந்த உத்வேகம் கிடைத்தது. எங்களுக்கு நாங்கள் எவ்வளவு முயற்சி செய்தும் அது கிடைக்கவில்லை. இதனால் ஒரு குறிப்பிட்ட வீரர் தான் அனைத்து பிரச்சனைக்கும் காரணம் என்பதெல்லாம் கிடையாது.
உங்களுக்கு உத்வேகம் கிடைக்கவில்லை என்றால் பல மாறுதல்களை சந்திக்க நேரிடும். வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் பல மாற்றங்களை செய்தோம். இதன் மூலம் எங்களுக்கு தேவையான முடிவுகள் கிடைக்காமல் போய்விட்டது. காகிதத்தில் எடுத்துக் கொண்டால் ஐபிஎல் தொடரில் ஒரு பலமான அணியாக நாங்கள் விளங்குகிறோம்.
இவ்வளவு திறமை வாய்ந்த வீரர்கள் இருந்தும் நாங்கள் எப்படி பத்தாவது இடத்தை பிடித்தோம் என்று தான் அனைவரும் யோசிக்கிறார்கள். மேலும் எங்களுக்கு அதிர்ஷ்டம் கொஞ்சம் கூட இல்லை. நாங்கள் அடித்த சில ஷாட்கள் சிக்ஸருக்கு சென்றிருக்கும். ஆனால் அன்றைய தினம் பில்டரின் கையில் கேட்ச் ஆக மாறி இருக்கும். இதேபோன்று நாங்கள் வீசிய பந்துகள் சில நேரம் போல்டாகி இருக்கும். ஆனால் அன்றைய தினம் அது சிக்ஸர் ஆக மாறி இருக்கும். இப்படித்தான் நாங்கள் தோல்வியை தழுவினும் என்றும் பியூஸ் சாவ்லா கூறியுள்ளார்.