சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே, மும்பை அணிகள் மோதும் ஆட்டத்தை தான் ரசிகர்கள் வெகுவாக விரும்பி பார்ப்பார்கள் என்ற காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது. அதையே மிஞ்சும் அளவுக்கு அண்மையில் நடந்த லக்னோ, ஆர் சி பி அணிகள் மோதிய ஆட்டம் இருந்தது.
முதலில் பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றவுடன் கம்பீர் வாயை மூடுங்கள் என ஆர் சி பி ரசிகர்கள் முன் செய்கை செய்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக லக்னோவில் விராட் கோலி தனது ஆக்ரோஷம் முகத்தை காட்டினார்.

இந்த போட்டியின் முடிவில் விராட் கோலியும் கம்பீரும் மோதிக் கொள்ளும் சூழல் உருவானது. இதனை அடுத்து இருவரையும் மற்றவர்கள் விலக்கி விட்டனர். இந்த மோதல் தொடர்ந்து லக்னோ வீரர் நவீன் உல்ஹக்கும், விராட் கோலியும் மாற்றி மாற்றி சமூக வலைத்தளத்தில் மறைமுகமாக மோதிக்கொண்டனர். இந்தப் போட்டி முடிந்த பிறகு இவ்விரு அணிகளும் மீண்டும் ஒருமுறை மோதுவதை நாங்கள் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் வெளிப்படையாகவே சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துக் கொண்டனர்.
இதற்கான வாய்ப்பு தற்போது உருவாகி இருக்கிறது. ஆர்சிபி அணியும் லக்னோ அணியும் எலிமினேட்டர் போட்டியில் மோத வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது. அதுவும் இந்த போட்டி சென்னையில் நடைபெற கூடும். எந்த அணி யாருடன் மோதி, யார் வெற்றி பெற்றால் இந்த சூழல் உருவாகும் என்பதை தற்போது பார்க்கலாம். ஆர் சி பி அணி பொறுத்த வரை, தாங்கள் எஞ்சிய இரண்டு ஆட்டத்தில் ஹைதராபாத் மற்றும் குஜராத் அணியை வீழ்த்த வேண்டும்.

இதேபோன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்த வேண்டும். இதே போன்று கொல்கத்தா அணி தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் லக்னோவை வீழ்த்த வேண்டும். இதைப் போன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலம் வாய்ந்த மும்பையை வீழ்த்த வேண்டும். இதேபோன்று டெல்லி அணி அல்லது ராஜஸ்தான் அணி பஞ்சாப்பை வீழ்த்த வேண்டும். இந்த முடிவுகள் மற்றும் நடந்தால் நாம் மீண்டும் கோலியும் கம்பீரும் மோதிக் கொள்ளும் ஆட்டத்தை நம் சென்னையிலே பார்க்க நேரிடலாம்.